பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிரான சிங்கப்பூரின் விழிப்புநிலையைச் சோதிக்கும் வகையில், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில், பல்வேறு அரசாங்க அமைப்புகள் இணைந்து பயங்கரவாதத் தடுப்பு பாவனைப் பயிற்சியில் ஈடுபட்டன.
மே 2ஆம் தேதி காவல்துறை அதைத் தெரிவித்தது.
பாவனைப் பயிற்சியில் சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சோதனைச் சாவடிகள், பெருவிரைவு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த பாவனைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
பாவனை மிரட்டல் சூழலில் உள்துறை அமைச்சுக் குழு, சிங்கப்பூர் ஆயுதப் படை ஆகியவற்றின் அதிகாரிகள் கூட்டாகச் சுற்றுக்காவலில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையங்கள், கரையோரப் பகுதிகள், உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் போன்ற அபாயம் ஏற்படக்கூடும் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அவர்கள் பணியில் ஈடுபட்டனர்.
செந்தோசாவில் கடல் வழியாக ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது போன்ற பாவனைச் சூழலில் அவர்கள் பயிற்சி செய்தனர்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும் சூழலைக் கையாளும் திறன் தொடர்பில் குடிமைத் தற்காப்புப் படையும் பயிற்சியில் ஈடுபட்டது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயல்பாடுகளின் தயார்நிலையை மேம்படுத்தும் விதமாக வழக்கமான இடைவெளியில் இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் இடம்பெறும் என்று காவல்துறை கூறியது.
பயங்கரவாத மிரட்டல்களை விரைவாகவும் திறம்படவும் கையாளும் சிங்கப்பூரின் திறனை வலுப்படுத்த இத்தகைய பயிற்சிகள் கைகொடுக்கும் என்று அது குறிப்பிட்டது.