சிங்கப்பூரின் பொதுப் பேருந்துக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கு 175 மில்லியன் வெள்ளி மதிப்புக்கும் மேலான குத்தகைகள் சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் எஞ்சினியரிங் (எஸ்டி எஞ்சினியரிங்) குழுமத்தின் நகரத் தீர்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிலப் போக்குவரத்து ஆணையம் குத்தகைகளை எஸ்டி எஞ்சினியரிங் குழுமத்துக்கு வழங்கியிருக்கிறது. பொதுப் பேருந்துகளின் பயணக் கட்டண முறை, தொடர்பு முறைகள் உள்ளிட்டவற்றைப் புதுப்பிப்பதற்காகக் குத்தகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சிங்கப்பூரின் பொதுப் பேருந்துச் சேவைகளும் அவற்றின் செயல்பாடுகளும் நவீனப்படுத்தப்படும் என்று எஸ்டி எஞ்சினியரிங் குழுமம் வியாழக்கிழமையன்று (மே 2) தெரிவித்தது.
பொதுப் பேருந்துக் கட்டமைப்புக்கான புதுப்பிப்புப் பணிகள் இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் தொடங்கும். அவை 2027ஆம் ஆண்டுக்குள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படும்.
சுமார் 5,800 பொதுப் பேருந்துகள் புதுப்பிப்புப் பணிகளில் இடம்பெறும்.
நிலப் போக்குவரத்து ஆணையம், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை மேலும் ஆக்கபூர்வமாக்குவதில் இந்நடவடிக்கை முக்கியப் பங்கு வகிப்பதாக எஸ்டி எஞ்சினியரிங் நம்புகிறது.