சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் பெய்துவரும் கனமழை காரணமாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அப்பகுதிகளிலிருந்து புறப்படுவதற்கு நீண்ட தாமதத்தை எதிர்கொண்டன.
சீனாவின் ஷாங்காய் நகரத்திலிருந்து சிங்கப்பூருக்கான SQ825 விமானமும் பெய்ஜிங்கிலிருந்து சிங்கப்பூருக்கான SQ801 விமானமும் மோசமான வானிலை காரணமாக புறப்படத் தாமதமானதாகச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இது தொடர்பான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது கூறியது.
ஸ்கூட் நிறுவனத்தின் நான்கு விமானங்களும் இதனால் பாதிக்கப்பட்டன. இருப்பினும், பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையைத் தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
ஷாங்காயிலிருந்து சிங்கப்பூருக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 330 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் திட்டமிடப்பட்ட அட்டவணையிலிருந்து நான்கு மணி நேரத்திற்குப் பிறகு புறப்பட்டது என்றும் பயணிகளுக்குச் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
மேலும், பெய்ஜிங்கிலிருந்து புறப்பட ஆறு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானதாகவும் அந்நிறுவனம் கூறியது.