இளம் வயதிலிருந்தே தனது பெற்றோரால் உதாசீனப்படுத்தப்பட்ட பதின்ம வயது ஆடவர் ஒருவர் வளர்ப்புக் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
குற்றச் செயலில் ஈடுபட்டதால் காவல்துறை அவர் மீது விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து அந்த இளையரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு உத்தரவிடப்பட்டது.
அப்போது 16 வயதான அந்த இளையரை, பெரியவராவதற்கு முன்பு வழிதவறிப் போகாமல் பார்த்துக்கொள்வது அந்நடவடிக்கையின் இலக்காக இருந்தது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டது இளையரையும் அவரின் தாயையும் தங்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ள ஊக்குவித்தது.
இளையரின் பெற்றோர் இருவரும் பலமுறை போதைப்பொருள் குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். அவரின் தந்தை பாலியல் குற்றத்துக்காக தற்போது எட்டு ஆண்டுச் சிறைத் தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.
சீர்திருத்தப் பள்ளியில் இருந்தபோது இளையர் தொழில்துறைப் பாடத் திட்டத்தில் சேர்ந்துகொண்டார். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோபின் பதவிக் காலம் நிறைவடைவதை அனுசரிக்கும் விருந்து நிகழ்ச்சிக்காக உணவு தயாரித்த குழுவில் அவர் இடம்பெற்றார். அந்நிகழ்ச்சி இஸ்தானா அதிபர் மாளிகையில் நடைபெற்றது.
அதேவேளை, அவரின் தாய் மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டார். தாயும் மகனும் எடுத்த முயற்சிகளால் இருவரும் எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே மீண்டும் இணைய முடிந்தது.
அந்த இளையருக்கு இப்போது வயது 19. நடத்தையில் அமோக முன்னேற்றம் கண்டதால் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்துக்கு முன்பே அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுவிக்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, இளையர் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்தது.
முதலில் இளையர் தனது 21வது வயதில்தான் விடுவிக்கப்படவிருந்தார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் விண்ணப்பத்தை மாவட்ட நீதிபதி பேட்ரிக் டே ஏற்றுக்கொண்டு இளையரை முன்னதாகவே விடுவிக்க அனுமதி வழங்கினார். இளையரின் முன்னேற்றம் தனித்துவம் வாய்ந்தது என்பதே விண்ணப்பத்தைத் தான் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் என்று நீதிபதி டே ஏப்ரல் மாதம் 26ஆம் தேதியன்று தெரிவித்தார்.
வருங்காலத்தில் இளையருக்கு உதவ சம்பந்தப்பட்ட சிறுவர் சீர்திருத்தப் பள்ளி, முழுமையான திட்டம் ஒன்றை வரைந்தது. பள்ளி வழங்கும் கல்வி உபகாரச் சம்பளத்துக்கு அவர் விண்ணப்பிக்க வகைசெய்யும் அம்சமும் திட்டத்தில் அடங்கும்.
அந்த உபகாரச் சம்பளம், பள்ளியில் சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டோருக்கானது; கல்வியை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தோருக்கு அது பொருந்தும்.