போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 29 மோட்டர்சைக்கிளோட்டிகளைச் சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
மார்ச் 12ஆம் தேதிக்கும் ஏப்ரல் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட ஆறு வாரக் காலங்களில் விபத்து ஏற்படக்கூடிய மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் ஏற்படக்கூடும் எனச் சந்தேகிக்கும் இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கிட்டத்தட்ட 1,400 போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் விதிமுறைகளை மீறியதற்காக 29 மோட்டர்சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் போக்குவரத்துக் காவல்துறை புதன்கிழமை (மே 1ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
வேகமாக வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, கவனமின்றி வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக அழைப்பாணைகள் வழங்கப்பட்டதாகப் போக்குவரத்து காவல்துறையினர் அதில் குறிப்பிட்டனர்.
பெரும்பாலானோர் செல்லுபடியாகும் உரிமம், காப்புறுதியின்றி வாகனம் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டனர் என்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் போக்குவரத்துக் காவல்துறை கூறியது.
மேலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் பயங்கர ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் 31 வயதான மோட்டர்சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் சாலையில் குறுக்குமறுக்காகச் செல்வதால் வரும் ஆபத்துக் குறித்துக் கிட்டத்தட்ட 1,000 பாதசாரிகளுக்குப் போக்குவரத்துக் காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.
மேலும், பாதசாரிகள் கடக்குமிடங்களைப் பயன்படுத்துவது குறித்தும் சாலை பாதுகாப்பு பற்றியும் பாதசாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள்மீதும் போக்குவரத்துக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மூத்த உதவி காவல்துறை ஆணையர் டேனியல் டான் தெரிவித்தார்.
மேலும், “விபத்து யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நடக்கலாம். அதனால் விழிப்பாய் இருங்கள். எங்கள் அமலாக்க நடவடிக்கைகளை நாங்கள் தொடர்வோம். சாலைகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்க போக்குவரத்து விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் திரு டான்.