மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் மே தினக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றினார்.
இதுவே பிரதமராக அவர் ஆற்றிய கடைசி முக்கிய அரசியல் உரை என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் அரசியலுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். சிறப்பான நிலையில் இருக்கும் சிங்கப்பூரை எனக்குப் பிறகு பிரதமராகப் பதவி வகிக்க இருப்பவரிடம் மனநிறைவுடன் ஒப்படைக்க இருக்கிறேன். என் கடமையைச் செய்துவிட்டேன். இத்தனை ஆண்டுகளாகப் பொதுச் சேவையில் ஈடுபட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று திரு லீ கூறினார்.
இவற்றை பிரதமர் லீ கூறியபோது, அரங்கில் இருந்தோர் அனைவரும் எழுந்து கிட்டத்தட்ட 30 வினாடிகளுக்கு கரவொலி எழுப்பினர். அப்போது பிரதமர் லீ, உணர்ச்சி பொங்க கூட்டத்தைப் பார்த்துக் கையசைத்தார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர் தமது கைப்பேசியைத் தூக்கிக் காட்டினார். அதில் ‘நன்றி பிரதமர் லீ’ எனும் வாசகம் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.
நிலையற்ற உலகில் பல சவால்கள் காத்திருக்கும்போதிலும் எதிர்காலத் தலைமுறையினருக்காக வலுவான அடித்தளத்தை சிங்கப்பூர் அமைத்திருப்பதாக திரு லீ கூறினார்.
நாட்டை வழிநடத்துவது தனி ஒருவரால் மட்டும் முடியாது என்று தெரிவித்த பிரதமர் லீ, அதைக் குழுவாக இணைந்து செய்தால் மட்டுமே முடியும் எனத் தெரிவித்தார்.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கிய சிங்கப்பூரர்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
“நாட்டின் பிரதமராக இருந்து உங்களை வழிநடத்தவும் சிங்கப்பூரை சிறப்பான முறையில் ஆட்சி செய்யவும் நான் கடுமையாக உழைத்துள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பல சாதனைகளைப் படைத்து உச்சம் தொடலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் முனைப்புடன் செயல்பட்டுள்ளேன். எனக்குப் பிறகு நாட்டைச் சிறந்த முறையில் வழிநடத்த தலைமைத்துவக் குழு ஒன்றையும் தயார் செய்துள்ளேன்,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
இதற்கிடையே, சிங்கப்பூரர் என்ற தனித்துவம் வாய்ந்த அடையாளத்தை உருவாக்க பேரளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் வெளிநாட்டு நிகழ்வுகளால் சிங்கப்பூரில் உள்ள பல இன, பல சமய மக்கள் பிளவுபடும் அபாயம் இருப்பதைப் பிரதமர் லீ சுட்டினார்.
“சிங்கப்பூரர்கள் வெவ்வேறு பூர்வீகங்களைக் கொண்டவர்கள். இனம், சமயம் அடிப்படையில் வேறுபடுபவர்கள். இதைச் சிங்கப்பூரர்கள் மறுக்க முடியாது. சிங்கப்பூர் சீனர்களின் முன்னோர்கள் சீனாவிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் இந்தியர்களின் முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் உள்ள மலாய்க்காரர்களின் முன்னோர்கள் தென்கிழக்காசியாவில் உள்ள பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
“இந்நிலை, சிங்கப்பூருக்குப் பாதகமாக அமையக்கூடும். இருப்பினும், இந்த வளமிக்க கலாசார, வரலாற்று சிறப்பு மரபுடைமையை சிங்கப்பூர் இழக்க விரும்பவில்லை.
“எனவே, சிங்கப்பூரைப் பொறுத்தவரை இன, சமய நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் பணிகள் என்றென்றும் தொடரும். பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று மெத்தனமாக இருந்துவிடக்கூடாது,” என்று பிரதமர் லீ வலியுறுத்தினார்.