சாங்கி விமான நிலையத்துடன் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையை இணைப்பதற்கான சீரமைப்புப் பணிகள் 2025ஆம் ஆண்டில் தொடங்குகின்றன.
இதனை முன்னிட்டு கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் உள்ள தானா மேரா, எக்ஸ்போ, சாங்கி விமான நிலையம் ஆகிய மூன்று எம்ஆர்டி நிலையங்களில் 2025ஆம் ஆண்டிலிருந்து சீரமைப்புப் பணிகள் நடைபெறும்.
எதிர்காலத்தில் அவை தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கு உட்பட்ட நிலையங்களாக இயங்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சீரமைப்புப் பணிகளை நடத்தும் ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுத்து நியமிக்க, ஏப்ரல் 29ஆம் தேதியன்று ஏலக்குத்தகைக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்பு விடுத்தது.
2040ஆம் ஆண்டுக்குள் சாங்கி விமானத்திலிருந்து நேரடி எம்ஆர்டி இணைப்பை உருவாக்கும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்குத் திசையில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் கடைசி எம்ஆர்டி நிலையமான சுங்கை பிடோக் நிலையத்தையும் கடந்து ரயில் பாதை நீட்டிக்கப்படும்.
எதிர்காலத்தில் திறக்கப்பட இருக்கும் சாங்கி விமான நிலைய முனையம் 5 வரை அது செல்லும்.
இந்த எம்ஆர்டி நிலையம் 2030ஆம் ஆண்டுக்கும் 2040ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் திறக்கப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.