அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்), தமிழ்மொழி விழா 2024ஐ ஒட்டி, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்மொழியின் சொல்லாற்றல் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
இதை முன்னிட்டு உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் கடந்த மார்ச் 31ஆம் தேதி போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் நிலையில் வந்த மாணவர்கள் தங்கள் ஆய்வினை நிகழ்ச்சி மேடையில் நேரடியாகப் படைக்க உள்ளார்கள்.
திரைப்படப் பாடலாசிரியர் அறிவுமதி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு அவர் பரிசுகள் வழங்கிச் சிறப்பிப்பார்.
போட்டியில் பங்குகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.