லாப நோக்கமற்ற அமைப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய சமூக மையம் ஒன்று இவ்வாண்டின் நவம்பர் இறுதியில் திறக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
சமூகத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த மையம் ‘த ஃபவுண்டரி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.
அந்த மையம் 11 பிரின்செப் லிங்கில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் அமையும். 2019ஆம் ஆண்டு வரை அந்தக் கட்டடம் தேர்தல் துறை அலுவலகமாக இயங்கியது.
‘ஃபவுண்ட்ரி’ மையத்தில் லாப நோக்கமற்ற 24 அமைப்புகள் இடம்பெறும்.
‘த மஜுரிட்டி டிரஸ்ட்’ (டிஎம்டி) என்னும் அறநிறுவனம், சிங்கப்பூர் அரசாங்க பங்காளித்துவ அலுவலகம், சிங்கப்பூர் நில ஆணையம், பந்தயப் பிடிப்புக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து அந்த மையத்தை நிறுவி வருகிறது.
அமையவிருக்கும் மையம் சமூகப் பணிகளை மேம்படுத்துவதில் வகிக்கும் பங்கை சிங்கப்பூர் நில ஆணையம் அங்கீகரிப்பதாகவும் சமூகத்திற்குத் தொண்டாற்றும் வகையில் அந்த மையம் அமைய இருக்கும் கட்டடம் மாற்றி அமைக்கப்படுவதாகவும் சட்ட அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் மார்ச் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
டிஎம்டி அமைப்புடன் விண்டேஜ்ரேடியோ.எஸ்ஜி போன்ற இதர ஆறு லாப நோக்கமற்ற அமைப்புகளும் ‘ஃபவுண்ட்ரி’ மையத்திற்கு நவம்பர் மாதம் இடம் மாறத் திட்டமிட்டு உள்ளன.
இத்தகைய அமைப்புகள் சமூகத்திலிருந்து மூத்தோர் விலகி இருப்பது, இளையர் மனநலம் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளைச் சமாளித்து வருகின்றன.
‘ஃபவுண்ட்ரி’ மையத்தின் 17,000 சதுர அடி கொண்ட முதல் தளம் 120 பேர் வரை அமர்ந்து பார்க்கக்கூடிய நிகழ்வுகளை நடத்தக்கூடிய பகுதியாக வடிவமைக்கப்படுகிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில், தனிப்பட்டோருக்கும் சிறிய, பெரிய அமைப்புகளுக்கும் சேவையாற்றக்கூடிய அலுவலகங்கள் அமையும்.
மூன்று மாடிக் கட்டடத்தில் ஐந்தாண்டுக் குத்தகையில் ‘ஃபவுண்ட்ரி’ அமைக்கப்படுவதாக டிஎம்டி தலைமை நிர்வாகி மார்ட்டின் டான் தெரிவித்தார்.
இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அந்தக் குத்தகை தொடங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மேலும் நான்கு ஆண்டுகளுக்குக் குத்தகைப் புதுப்பிக்கப்படுவதற்கான தெரிவு இருப்பதாகத் தெரிவித்தார்.