கேலாங் வட்டாரத்தில் சாலையைக் கடந்துகொண்டிருந்த இரு பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியது.
இதில் அந்த இரு பாதசாரிகளும் தூக்கி எறியப்பட்டு தரையில் விழுந்தனர்.
அவர்களில் ஒருவர் சாலையின் நடுவே அசைவற்ற நிலையில் கிடந்தார்.
சம்பந்தப்பட்ட கார் நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்ட்டே ஃபேஸ்புக் குழுத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்தச் சாலை விபத்து மார்ச் மாதம் 23ஆம் தேதி இரவு 11.40 மணி அளவில் சிம்ஸ் அவென்யூ ஈஸ்ட்டை நோக்கிச் செல்லும் சிம்ஸ் அவென்யூவில் கேலாங் லோரோங் 19க்கு அருகில் நிகழ்ந்தது.
விபத்தில் காயமடைந்த 51 வயது ஆடவரும் 32 வயது பெண்ணும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது இருவரும் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கார் ஓட்டுநரை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் காவல்துறை கூறியது.