நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான பதாகைகளை பல்கலைக்கழகம் அகற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அன்று கேள்விகளுக்கு பதிலளித்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேச்சாளர் ஒருவர், அந்தப் பதாகைகளை வைக்க பல்கலைக்கழகம் அனுமதி தரவில்லை என விளக்கினார். அதனால் அவை அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார். அது குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது பற்றிய புகைப்படங்கள் முதன் முதலில் மார்ச் 2ஆம் தேதி இணையத்தில் பரவின. அதில் பல்கலைக்கழகத்துக்கு கட்டணம் செலுத்துவது காஸா போரில் இஸ்ரேலை ஆதரிப்பதற்குச் சமம் என்று கூறப்பட்ருந்தது. அந்தப் பதாகைகள் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள், வர்த்தகங்கள் ஆகியவற்றுடனும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை தொடர்புப்படுத்தின.
இன்ஸ்டகிராம், ரெடிட் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அந்தப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்த படங்கள் வந்ததாகவும் அவற்றை 9,000க்கும் மேற்பட்டோர் பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 750 விமர்சனங்களும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறியது.