தம் மனைவியைத் தாக்கியதற்காக வீட்டிலிருந்து வெளியேற நேரிட்ட ஆடவர் ஒருவர், உதவிக்காக தம் 81 வயது தாயாரிடம் திரும்பினார். ஆனால், குடிபோதையில் தாயாருடைய வீட்டிற்குத் திரும்பிய அந்த ஆடவர், அவரைப் பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதோடு கழுத்தையும் நெரித்தார்.
பலமுறை குற்றம் புரிந்த அந்த ஆடவருக்கு இப்போது வயது 61. பாலியல் ரீதியாகத் தாக்கி தம் 60 வயது மனைவிக்குக் கடும் காயம் விளைவித்த குற்றத்தை செவ்வாய்க்கிழமை அவர் ஒப்புக்கொண்டார்.
1982 முதல் 2019 வரை அந்த ஆடவரின் குற்றப் பதிவேட்டில் 50 பதிவுகள் உள்ளன. அவர் சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
அந்த ஆடவரைத் தடுத்து வைப்பதற்கான சூழலை ஆராய அறிக்கை ஒன்றை உயர் நீதிமன்ற நீதிபதி கோரியதைத் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பொதுமக்களைப் பாதுகாக்க, மீண்டும் குற்றம் புரிவோர் ஏழு முதல் 20 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்படலாம்.
வீட்டை உடைத்துப் புகுந்து திருடுவது, முறைகேடான நடத்தை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக கடந்த காலத்தில் அந்த ஆடவருக்கு அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.