நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் பொதுமக்களை மகிழ்வித்தது சிங்கப்பூர் விமானக் காட்சி 2024.
இரு நாள்களிலும் எதிர்பார்த்ததைப் போலவே 60,000 பேர் வந்ததாகவும் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனையானதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
பிப்ரவரி 24ஆம் தேதி காலை 7.30 மணி முதல் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6 மணி வரை பார்வையாளர் கூட்டம் ஓயவில்லை.
இவ்வாண்டு சிங்கப்பூர் விமானக் காட்சியின் வான் அங்கங்களில் வரலாற்றிலேயே ஆக அதிகமான வெளிநாட்டு விமானப் படைகள் பங்குபெற்றன.
சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, கொரியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளின் ஆகாயப் படைகள் வான் சாகசங்களைப் படைத்தன. ‘ஏர்பஸ் ஏ350-1000’ மற்றும் அமெரிக்க, சீன விமானங்களும் பறந்தன.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-15எஸ்ஜி, ஏஹெச்-64டி ரக விமானங்கள், நான்கு ஒருங்கிணைந்த சாகசங்களோடு மொத்தம் 12 சாகசங்களைப் படைத்து மக்களை மகிழ்வித்தன.
நிலத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பன்னாட்டு விமானங்களைக் கண்டு, அவற்றில் ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்து பார்வையாளர் குடும்பங்கள் மகிழ்ந்தன.
சிங்கப்பூர் விமானக் காட்சிக்காகத் தன் பெற்றோரை இந்தியாவிலிருந்து அழைத்து வந்திருந்த பாலமுருகன், 34, “நான் பெங்களூரில் விமானக் காட்சி கண்டிருக்கிறேன். அதனினும் நன்றாக இருந்தது இன்றைய காட்சி,” எனக் கூறினார்.
“கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக விமானிகள் துணிச்சலோடு ஒருங்கிணைந்த வான் சாகசங்களைப் படைத்தனர். கடும் வெயிலிலும் சிங்கப்பூர் ஆகாயப் படையினர் விமானங்களைப் பற்றிப் பொறுமையாக விவரித்தனர்.
“உள்ளரங்கிலும், ‘எஸ்டி இஞ்சினியரிங்’, இந்தியாவின் ‘பிரமோஸ்’ போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள் என்னைக் கவர்ந்தன,” என்றார் கீர்த்தி ராஜன், 26.