சிங்கப்பூரில் விமானங்களை நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிபொருளைப் பயன்படுத்த வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கொக் ஜுவான் கூறியுள்ளார்.
அவ்வாறு செய்யும்போது பயணக் கட்டணம் அதிகரிக்கக்கூடும், விமானப் போக்குவரத்து மையமாக சிங்கப்பூர் விளங்குவதில் பாதிப்பு ஏற்படக்கூடும்; இருந்தாலும், இந்நடவடிக்கையை எடுப்பது அவசியம் என்று செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 20) திரு ஹான் சொன்னார்.
இவ்வாண்டின் ஆகாயக் காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு பேசினார்.
“நமக்கு வேறு வழியில்லை. நமது விமான நிலையங்களில் என்றைக்காவது நீடித்த நிலைத்தன்மை அம்சமுள்ள எரிபொருளைப் பயன்படுத்தவேண்டிய நிலை உருவாகும் என்பதே அதற்குக் காரணம்,” என்றார் திரு ஹான்.
இதனால், சிங்கப்பூரிலிருந்து விமானச் சேவைகளை இயக்குவதற்கான செலவு அதிகரிக்கும். அதற்குப் பதிலாக மற்ற வழிகளில் கவர சிங்கப்பூர் முயற்சி செய்யும் என்று திரு ஹான் குறிப்பிட்டார். அது குறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
ஆகாயக் காட்சி கலந்துரையாடலில் சுமார் 70 பேர் கலந்துகொண்டனர். பேராளர்கள், கண்காட்சிப் படைப்பாளர்கள் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். மேக்கின்சி & கம்பெனி சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஒலிவர் பிளோக்மன் கலந்துரையாடலின் நெறியாளராகச் செயல்பட்டார்.