வீடுகளில் இணையத் தொடர்பு வேகத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் சிங்கப்பூர் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது.
இதனால் ஒரே சமயத்தில் பல சாதனங்களில் மிகத் தெளிவான, கூர்மையான காணொளிக் காட்சிகள், தங்கு தடையற்ற இணைய விளையாட்டுகள், மெய்நிகர் அனுபவங்கள் போன்றவை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் ஏற்படவிருக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், அரசாங்கம் தேசிய அளவில் அகண்ட அலைவரிசை இணையத் தொடர்பை மேம்படுத்த முதலீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்தப் பத்தாண்டின் இரண்டாவது பாதியில் இணையத் தொடர்பு வேகத்தை ஒரு நொடிக்கு 10 கிகாபிட்சுக்கு (Gbps, gigabits per second) அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று நிதி அமைச்சருமான திரு வோங் தெரிவித்திருந்தார்.
“தற்போது வீடுகளில் உள்ள வேகத்தைவிட அது பத்து மடங்கு அதிகமாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களுக்கு ஆதரவான இணையத் தொடர்பு உள்கட்டமைப்புகளுக்கு உறுதியளிக்கும்.
“வீடுகளில் இருப்பவர்கள் ஒரு நொடிக்கு ஒரு கிகாபிட்ஸ் வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும். கடந்த ஆண்டிலிருந்து சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அத்தகைய வேகத்தில் இணையத் தொடர்பை வழங்க ஆரம்பித்துவிட்டன,” என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி 2.0 திட்டத்திற்கு மாபெரும் அளவில் ஒரு பில்லியன் வெள்ளி முதலீட்டை சிங்கப்பூர் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இணையத் தொடர்பு மேம்பாடு அமைகிறது. முதலீட்டில் ஒரு பகுதி அடுத்த பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு தேவையான முக்கிய நவீன சில்லுகளை தங்குத் தடையின்றி பெறுவதை உறுதி செய்யும்.