செயற்கை நுண்ணறிவுத்துறையை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு $1 பில்லியனுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
மின்னிலக்க யுகத்தில் சிங்கப்பூரின் போட்டித்தன்மையைக் கூர்மைப்படுத்த இது உதவும் என்று வர்த்தகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்னிலக்கப் பொருளியலில் போட்டித்தன்மை நிலைத்திருக்க தொடக்கத்திலேயே மின்னிலக்கத் துறையில் புத்தாக்கத்தை கையாள்வது மிகவும் முக்கியம் என்று கூகல் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் திரு பென் கிங் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு போன்ற உருமாற்றுத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் விரைகிறது. இதற்கு இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் ஆதரவு வழங்குகிறது,” என்றார் திரு கிங்.
பிப்ரவரி 16ஆம் தேதியன்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் செயற்கை நுண்ணறிவுக் கணக்கிடல், திறன், துறை ஆகியவற்றை மேம்படுத்த $1 பில்லியனுக்கும் அதிகமான நிதி முதலீடு செய்யப்படும் என்று திரு வோங் தெரிவித்தார்.
உயர்நிலை சில்லுகள் சிங்கப்பூருக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முதலீட்டின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னதநிலையில் இருக்கும், தரம்வாய்ந்த செயற்கை நுண்ணறிவு மையங்களை சிங்கப்பூரில் அமைக்க முன்னணி நிறுவனங்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்படும் என்று துணைப் பிரதமர் வோங் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மின்னிலக்கப் பொருளியலின் பங்கு 17 விழுக்காடு ($106 பில்லியன்) என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
2019ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மேம்படுத்தப்பட்ட தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி 2.0 திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கிவைத்தது.