சிங்கப்பூரில் உள்ள ஆறு அக்கம்பக்க காவல் சாவடிகள் வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 26) முதல் நிரந்தரமாக மூடப்படும்.
இதர காவல்சாவடிகளும் அக்கம்பக்க காவல்நிலையங்களும் இவற்றின் அருகில் அமைந்திருப்பதால் இந்த ஆறு காவல்சாவடிகளும் மூடப்படுவதாக காவல்துறை திங்கட்கிழமை (பிப்ரவரி 19) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
ரிவர்வேலி, புக்கிட் பாஞ்சாங் நார்த், தியோங் பாரு, மெக்பர்சன், மவுண்ட்பேட்டன், ஹோங் கா சவுத் ஆகிய ஆறு பகுதிகளில் உள்ள அக்கம்பக்க காவல்சாவடிகள் மூடப்படும்.
இவற்றுக்கு அருகில் இருக்கும் காவல்துறையின் அக்கம்பக்க சாவடிகளையோ அக்கம்பக்க காவல்நிலையங்களையோ குடியிருப்பாளர்கள் தங்களது உதவிக்கு நாடலாம் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது.
அவசரமற்ற சம்பவங்கள் தொடர்பில் காவல்துறை சேவையை நாடுவோர் http://www.police.gov.sg/e-services என்னும் இணையத்தளத்தை நாடலாம் என்றும் அது தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளது.
“அதேநேரம் அவசர உதவிக்கு 999 என்னும் எண்ணை குடியிருப்பாளர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளலாம்,” என்று காவல்துறை மேலும் தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறையின் சேவையை பரவலாக்கும் விதமாக எட்டு புதிய அக்கம்பக்க காவல்சாவடிகள் 2025ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட உள்ளன.
அக்கம்பக்க காவல்சாவடி என்பது சிறிய அளவிலான காவல்நிலையம் ஆகும்.