எல்லா தேசிய சேவையாளர்களுக்கும் $200 ரொக்கம் அவர்களின் ‘லைஃப்எஸ்ஜி’ கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாண்டு தேசிய சேவையில் சேர்ந்தோருக்கும் அந்த உதவி கிடைக்கும்.
சிங்கப்பூரின் தற்காப்பிற்கு அவர்கள் அளித்து வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ரொக்கம் வழங்கப்படுவதாக வரவுசெலவுத் திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் தேசிய சேவையாளர்கள் அளித்த ஒப்பீடற்ற அர்ப்பணிப்புக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த சிறிய உதவி செய்யப்படுவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
“நமது தற்காப்பு மற்றும் பாதுகாப்பின் முதுகெலும்பாக தேசிய சேவை தொடருகிறது,” என்றார் அவர்.
ஏறக்குறைய 1.2 மில்லியன் தேசிய சேவையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த ரொக்க உதவியால் அரசாங்கத்துக்கு $240 மில்லியன் செலவாகும்.
நவம்பர் மாதம் வரவு வைக்கப்படும் இந்தத் தொகையை பேநவ் அல்லது நெட்ஸ் கியூஆர் அனுமதிக்கும் 100,000க்கும் மேற்பட்ட கடைகளில் செலவிடலாம். வரவு வைக்கப்பட்டதில் இருந்து ஓராண்டுக்கு அதனைச் செலவு செய்யலாம்.
இதற்கிடையே, இணைய அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு அதனைச் சமாளிக்க தேசிய இணையப் பாதுகாப்பு தளபத்திய நிலையம் ஒன்றும் புதிதாக ஏற்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூரின் இணையத் தற்காப்பு நடைமுறைகளை சிறந்த முறையில் ஒருங்கிணைத்து, தொழில்துறைக்கும் கல்விக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த அந்த நிலையம் உதவும்.