புவிசார் நெருக்கடிநிலை, வர்த்தக இடையூறுகள், உலகளாவிய வட்டி விகிதத்தில் நிலையற்றத்தன்மை ஆகியவை இவ்வாண்டும் தொடர்வதற்கான சாத்தியங்கள் ஏராளம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்வாண்டு தாக்கல் செய்யப்பட இருக்கும் வரவுசெலவுத் திட்டம் தங்கள் செலவுகளைக் குறைக்கவும் தொடர்ந்து ஆக்கபூர்வமாகச் செயல்படவும் உதவ வேண்டும் என்று சிங்கப்பூர் குடும்பங்கள், ஊழியர்கள் ஆகியோருடன் உள்ளூர் வர்த்தகங்களும் விரும்புகின்றன.
பணவீக்கம், வேலை தொடர்பான நிலையற்றத்தன்மை போன்ற சவால்களைச் சமாளிக்கக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர்.
செலவினம், மனிதவளம் ஆகியவை தொடர்பான சவால்களை எதிர்கொள்வது மட்டுமின்றி, நீண்டகால அடிப்படையில் போட்டித்தன்மைக்கான அடித்தளத்தை இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் அமைத்துத் தர வேண்டும் என்று பெரிய, சிறிய வர்த்தகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
அண்மையில் சிங்கப்பூரில் சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கின.
எனவே, நிரந்த ஊழியர்களாக இல்லாமல் ஒப்பந்த முறையில் பணிபுரியும் ஊழியர்கள் கூடுதல் வேலைப் பாதுகாப்பை எதிர்பார்க்கின்றனர்.
வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருப்பதால் அதன் தாக்கத்திலிருந்து தங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று உள்ளூர் குடும்பங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
பெரிய குடும்பங்களில் ஒருவர் மட்டுமே வேலை செய்யும்போது வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் குரல்கள் எழுந்துள்ளன.
பிப்ரவரி 16ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய இருக்கிறார்.