காஸா: ஹமாசுக்கு எதிரான போரில் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இஸ்ரேல் மீண்டும் மறுவுறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் காஸாவில் உள்ள பிணைக் கைதிகளில் ஐந்தில் ஒரு பங்கினர் உயிரிழந்துவிட்டதாக அரசாங்கம் தெரிவித்ததால் இஸ்ரேலிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஹமாசும் அதன் ஆதரவாளர்களும் அக்டோபர் 7ஆம் தேதி 136 பிணைக் கைதிகளை பிடித்துச் சென்றனர். போர் தொடங்கியதிலிருந்து இவர்களில் குறைந்தது 30 பேர் வரை இறந்துவிட்டனர் என்று இஸ்ரேலிய உளவுத் துறை அதிகாரிகள் கூறியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பார்வையிட்ட ரகசிய மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது.
2014ல் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நடைபெற்ற முந்தைய போரில் உயிரிழந்த இரு இஸ்ரேலியர்களின் உடல்கள் இன்னமும் காஸா வட்டாரத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து காஸா வட்டாரத்தில் கொல்லப்பட்ட பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 32க்கு அதிகரித்துள்ளது.
செவ்வாய்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேலிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் இரண்டு உடல்கள் கூடுதலாக உள்ள முரண்பாட்டை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என்று தெரிவித்தது.
“பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட உங்களுடைய அன்புக்குரியவர்கள் இப்போது உயிரோடு இல்லை. அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளோம் என்று 31 குடும்பங்களுக்கும் தெரிவித்துவிட்டோம்,” என்று ராணுவத்தின் தலைமை பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி செவ்வாயன்று தெரிவித்தார்.
முன்பு தெரியவராத இரண்டு பிணையக்கைதிகள் பற்றிய அறிக்கையை டைம்ஸ் வெளியிட்ட பின்னர் அவர் விளக்கமளித்துள்ளார்.