பெற்ற பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தியதற்கும் நீதித்துறை தன் கடமையைச் செய்ய இடையூறு விளைவித்ததற்கும் 35 வயது மாது ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த மாதின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் இருந்தனர்.
அவர்களில் ஒருவரான இரண்டரை வயது சிறுமி உமைசியா 2014ஆம் ஆண்டில் மாண்டார்.
மாதின் கணவர் துன்புறுத்தியதால் உமைசியா படுகாயம் அடைந்தார்.
பின்னர், காயங்கள் காரணமாக அவர் மரணம் அடைந்தார்.
ஆனால், உமைசியாவின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்குப் பதிலாக அதை எரித்துச் சாம்பலைப் பானை ஒன்றில் மறைத்து வைத்தனர், சிறுமியின் பெற்றோர்.
உமைசியாவுக்கு மரணம் விளைவித்த குற்றத்துக்காக மாதின் கணவருக்கு 21 ஆண்டுகள் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
மாது தன்னுடைய மூன்று பிள்ளைகளை அடித்துத் துன்புறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பிள்ளைகளை அவரின் கணவர் கொடுமைப்படுத்தியபோதும் அவர் தடுக்கவில்லை.