சிங்கப்பூரின் புதிய குடிமகனான ஃபிலிப் சான் மான் பிங், 59, என்பவர் மீது வெளிநாட்டு தலையீட்டுச் சட்டம் பாய்ந்துள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும் முதல் நபர் அவர்.
ஹாங்காங் வர்த்தகரான ஃபிலிப் சான், சிங்கப்பூரில் அடித்தள அமைப்புகளிலும் சமூக அமைப்புகளிலும் செயல்பட்டு வந்தவர். அத்துடன், சீனாவின் கதைகளைச் சொல்லி வெளிநாட்டு சீனர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
ஃபிலிப் சான் பல்வேறு சொத்துச் சந்தை முதலீட்டு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் என்றும் 2023 மார்ச் மாதம் [Ϟ]சீனா நாடாளுமன்றத்தின் வருடாந்திய இரு அமர்வுகளில் பங்கேற்க அழைக்கப்பட்டு இருந்ததாகவும் 2023 மே மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.
வெளிநாட்டு சீனப் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவருக்கு அந்த அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
சீன மக்களின் அரசியல் ஆலோசனை அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க உலகம் முழுதும் இருந்து அழைக்கப்பட்ட 30 பிரதிநிதிகளில் ஃபிலிப் சானும் ஒருவர். அது சீன அரசாங்கத்தின் ஆலோசனை அமைப்பு.
2019 அக்டோபரில் ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான பொதுக்கூட்ட விவாதம் ஒன்றில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அனுமதி இன்றி அதில் பங்கேற்றதற்காக காவல்துறை அவரை எச்சரித்தது.
இதற்கிடையே, திரு சான், கம்போங் சாய் சீ குடிமக்கள் ஆலோசனைக் குழு மற்றும் புக்கிட் தீமா சமுக மன்ற நிர்வாகக் குழுக்களின் புரவலராக இருந்ததாக மக்கள் கழகம் தெரிவித்தது. தற்போது அவர் எல்லாவிதமான அடித்தள அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டார்.