சிங்கப்பூர் காவல்துறையினர் தீவு முழுவதும் நடத்திய அதிரடிச் சோதனையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மூவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 84 பேர் பெண்கள், 15 பேர் ஆண்கள். அவர்களின் வயது 18க்கும் 49க்கும் இடைப்பட்டு இருந்ததாக காவல்துறை கூறியது.
அதிரடிச் சோதனை ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. உடற்பிடிப்பு நிலையங்கள், அழகு நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்புப் பகுதிகள் என 55 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பேசிகள், 27,000 வெள்ளி ரொக்கம், ஒரு வாகனம், சட்டவிரோதமான பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு சில ஆண்டுகள் சிறைத் தண்டனை, 100,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.