சிங்கப்பூரில் 2019 முதல் 2020ஆம் ஆண்டு வரை $32,500 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி மீது ஜனவரி 26ஆம் தேதி மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
46 வயதாகும் பூ சே சியாங், குடிநுழைவுக் குற்றவாளியிடம் இருந்து மேலும் $36,000 கையூட்டு பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்சம் பெற்றது மட்டுமன்றி பொய் சொல்லி அவரிடம் அந்த அதிகாரி $10,000 மோசடி செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பில் அரசாங்க அமைப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதாகக் கூறி அந்தத் தொகையை அந்த அதிகாரி பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
முன்னதாக, 2022 நவம்பரில் அவர் மீது ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளும் நீதித் துறை அதன் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்ததாக மூன்று குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
மொத்தம் 15 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
குடிநுழைவுக் குற்றம் தொடர்பில் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் சீன நாட்டவரான 37 வயது சென் குவாங்யுன் மீது நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பூ, சென் இருவருக்கும் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் $100,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.