ஏறத்தாழ 2 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு உத்தரவாதத் தொகுப்புக்கான வழங்கீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழங்கீடு அவர்களது மெடிசேவ் கணக்கில் அடுத்த மாதம் போடப்படும்.
அவர்களது வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
20 வயதும் அதற்கும் குறைவானவர்கள் மற்றும் 55 வயதும் அதற்கும் அதிகமானவர்களுக்கு பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அவர்களது மெடிசேவ் கணக்கில் $150 நிரப்பப்படும்.
பிப்ரவரியில் இன்னொரு சலுகையும் உண்டு. குறைந்த வருமான குடும்பத்தைச் சேர்ந்த 55 வயதும் அதற்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் என ஏறத்தாழ 850,000 பேருக்கு ‘உத்தரவாதத் தொகுப்பு மூத்தோர் போனஸ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக $200லிருந்து $300 வரை கிடைக்கும்.
இந்த மூத்தோர் $25,000 வரை வருடாந்திர மதிப்பு கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள். அத்துடன் 2021ஆம் ஆண்டு வருமானம் உட்பட மற்ற தகுதிநிலைகளையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
இந்த உத்தரவாதத் தொகுப்பின்கீழ் இரண்டு வழங்கீடுகள் வழங்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
மூன்றாண்டு காலத்துக்கான உதவித் தொகுப்பில், மூத்தோர் மொத்தமாக $600லிருந்து $900 வரையிலான வழங்கீட்டுத் தொகையையும் $450 வரையிலான மெடிசேவ் நிரப்புதலையும் பெறுவர் .
அடையாள அட்டையுடன் பேநவ் கணக்கை இணைத்திருப்பவர்கள் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் வழங்கீட்டுத் தொகையைப் பெறுவர்.
அவ்வாறு இல்லாது, வழங்கீட்டுத் தொகையைப் பெற தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைத் தந்திருப்போருக்கு பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் பணம் கிடைத்துவிடும்.
இவை இரண்டும் இல்லாத சிங்கப்பூரர்களுக்கு பிப்ரவரி 23ஆம் தேதிக்குள் GovCash மூலம் வழங்கீட்டுத் தொகை வழங்கப்படும்.
2022 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த வழங்கீடுகள் வழங்கப்படுகின்றன.
பணவீக்க அதிகரிப்பு மற்றும் பொருள், சேவை வரி அதிகரிப்பின் தாக்கத்தைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் இந்த வழங்கீட்டுத் தொகை தரப்படுவதாக ஜனவரி 15ஆம் தேதியன்று நிதி அமைச்சு தெரிவித்தது.