கீழே விழுந்த 15 வயதுச் சிறுமிக்கு உதவிய சிங்கப்பூர் ஆயுதப் படையின் முழுநேர ராணுவ வீரர் சுப்பிரமணியம் தபுரான் ரங்கசாமி, 50, பின்னர் அச்சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள முற்பட்டார்.
பதினாறு வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் உறவுகொள்ள முற்பட்ட குற்றத்தை அவர் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டார்.
பிப்ரவரி 1ஆம் தேதி சுப்பிரமணியத்துக்கு தண்டனை விதிக்கப்படும். அப்போது வேறு இரு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.
இப்போது 17 வயதாகும் அச்சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2021 டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி விடுமுறையின்போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுனில் நாயர் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்து இரு நாள்கள் கழித்து அச்சிறுமி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த தற்காப்பு அமைச்சின் பேச்சாளர், முதலாம் வாரண்ட் அதிகாரியான சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.