பீட்சாவுக்கு அடியிலிருந்து ஒரு சிறிய கரப்பான்பூச்சி ஊர்ந்து வெளியே வருவதைக் கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். பசியே போயிடுச்சு என்று அவர் கூறியுள்ளார்.
டிசம்பர் 11ஆம் தேதி ஃபுனான் மாலில் உள்ள ‘லிட்டில் சீசர்ஸ் ஈட்டரி’யிலிருந்து வாங்கிய பீட்சாவிலிருந்து ஒரு துண்டை வாயில் போட்டு ருசித்த மாறுபட்ட அனுபவத்தை அவர் பிரபல ‘ரெடிட்’ இணையத் தளத்தில் டிசம்பர் 14ஆம் தேதி அன்று பகிர்ந்துள்ளார்.
“நானும் எனது குடும்பத்தினரும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், உணவின் நடுவில், எங்கள் பீட்சாவின் அடியில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்று ஊர்ந்து வெளியே வந்தது. அதைப் பார்த்ததும் எங்களுக்கு பசியே போயிடுச்சு,” என்று அந்த வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர் பின்னர் உணவகத்துடன் 28 முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் எல்லாமே வீணானது என்று அவரது பதிவு தெரிவித்தது.
இது பற்றி சிங்கப்பூர் உணவு அமைப்பிடம் புகார் செய்துள்ளதாகவும் பதிவு குறிப்பிட்டது.
ஆனால் டிசம்பர் 15ஆம் தேதி உணவுக்கான பணம் திருப்பியளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இணையத் தளத்தில் இந்தச் சம்பவம் அதிவேகத்தில் பரவியதை அறிந்து சில மணி நேரங்களில் வாடிக்கையாளரை தொடர்புகொண்டு பேசியதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் ‘லிட்டில் சீசர்ஸ் பீட்சா’ உணவகம் தெரிவித்தது.
உணவகத்தின் பேச்சாளர் ஒருவர், “நாங்கள் இதயப்பூர்வமான மன்னிப்பை அவரிடம் கேட்டுக் கொண்டோம். வாடிக்கையாளருக்கு முழுப் பணத்தையும் திருப்பியளித்து, இரண்டு பெரிய பீட்சாக்களை அன்பளிப்பாக வழங்குகிறோம்,” என்றார்.
“உணவகத்தின் சமையல் அறையிலிருந்து கரப்பான்பூச்சி வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வாடிக்கையாளர், ஃபுனான் மாலில் உள்ள உணவகத்திலேயே சாப்பிட்டாரா அல்லது வரவழைத்துச் சாப்பிட்டரா என்பதும் தெரியவில்லை,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள தங்களது ஆறு உணவகங்களிலும் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதாகவும் தினமும் சுத்தம் செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார்.
இந்தச் சம்பவத்தை மிகக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய சிங்கப்பூர் உணவு அமைப்பு, விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தது.
போதுமான சான்றுகள் கிடைத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்று அது உறுதி கூறியுள்ளது.