அண்ணாந்து நோக்கும்; அதிக தூரம் பாயும்; அறிவார்ந்த தன்மையுடன் செயல்படும்.
தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30 பாதுகாப்பு இயந்திர அமைப்பு முழு செயலாக்கத்தை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை கடந்த புதன்கிழமையன்று (நவம்பர் 29) அறிவித்தது.
அதிநவீன உணர்கருவிகள், ஆயுத வகைகள், தரவு ஆய்வு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது கடந்த 2006ல் உருவாக்கப்பட்ட ‘ஏஸ்டர் 30’.
பிரான்சில் மேம்படுத்தப்பட்ட ‘ஏஸ்டர் 30’ ஏவுகணை அமைப்பு, 70 கிலோமீட்டர் தூரம் வரையிலும் 18 கிலோமீட்டர் உயரம் வரையிலும் சென்று போர் விமானங்களைத் தாக்கக்கூடியது. ‘ஏஸ்டர் 30’ பயன்படுத்தும் ஒவ்வோர் ஏவுகணையின் நீளம் ஐந்து மீட்டர்; எடை 450 கிலோ. அக்கணையால் ஒலியின் வேகத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு வேகத்தில் பாய முடியும்.
தீவின் ஆகாயப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றுமொரு படியை நிறைவேற்றியதில் உதவுவது குறித்து பெருமையாக இருப்பதாக ராணுவத் தற்காப்பு ஆயுதப் பிரிவில் அதிகாரியாக இருக்கும் கேப்டன் ரோய் ஃபிரான்சிஸ், 27, தெரிவித்தார்.
தேசிய சேவை முடித்த பின்னர் இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ரசாயனப் பொறியியல் துறையில் பயின்றார். பல்கலைக்கழகப் படிப்புக்குப் பிறகு ஆயுதப் படையில் முழுநேர சேவையாளராகச் சேர முடிவெடுத்தார்.
ஏஸ்டர்-30 அமைப்பு குறித்துக் கற்றுக்கொள்ள இவருக்குச் சில மாதங்கள் ஆயின. இந்த அமைப்பிற்கு, பழைய ‘ஐ-ஹோக்’ அமைப்பிற்குத் தேவையான ஆள்பலத்தில் பாதிதான் தேவைப்படுகிறது.
“ஆயினும், அறிவார்ந்த இந்த அமைப்பு, எங்கள் உடல்வலுவையும் அறிவாற்றலையும் சோதித்தது,” என்று அவர் கூறினார்.
இந்தப் புதிய தற்காப்பு அமைப்பிற்காகப் பல்வேறு ஆகாயப் படைப்பிரிவுடன் பணியாற்றும் கேப்டன் ரோய், மகிழ்ச்சியிலும் சிரமங்களிலும் இணைவதாகக் கூறினார்.
“சிங்கப்பூரின் ஆகாயப் பாதுகாப்பை உறுதிசெய்ய 24 மணி நேரமும் எங்கள் பிரிவு அல்லும் பகலும் அயராது உழைத்ததை இந்தத் தற்காப்பு ஆயுத அமைப்பு வெளியீட்டு விழா அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.