போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் நடத்திய ஐந்து நாள் அதிரடி சோதனையில் விதிமுறைகளை மீறியதற்காக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 159 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் சோதனை நடவடிக்கை நவம்பர் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
வேகமாக வாகனத்தை ஓட்டியது, சிவப்பு நிற விளக்கை மீறி சென்றது, கார் இருக்கையில் வார் அணியாமல் இருந்தது, வாகனத்தை ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தியது, தலைக்கவசம் தொடர்பான பிரச்சினைகள் என போக்குவரத்து விதிமீறல்கள் செய்தவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
இரண்டு நபர்கள் வாகன ஓட்டும் உரிமம் இல்லாமலும் காப்பீடு இல்லாமலும் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர்.
அந்த நபர், ஓட்டுநர் உரிமம் இல்லாத நபரை வாகனம் ஓட்ட வைத்தது, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது, கவனமில்லாமல் வாகனத்தை ஓட்டியது என பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை செய்தவர் என்று காவல்துறை தெரிவித்தது. மேலும் அவர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வராமல் இருந்தவர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
தங்களது வாகனத்தை மற்றவர்களிடம் தரும் போது அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு வாகனத்தை தருமாறு காவல்துறை வாகன உரிமையாளர்களை கேட்டுக்கொண்டது.
ஓட்டுநர் உரிமம் இல்லாத நபருக்கு வாகனம் ஓட்டக் கொடுப்பவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அந்தக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்களுக்கு 20,000 வெள்ளி வரையிலான அபராதமும் ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
வாகனமோட்டிகள் தங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைகளை காவல்துறையின் இணையவாசல் வழி தெரிந்துகொள்ளலாம். அழைப்பாணைகளை அலட்சியப் படுத்துபவர்கள் கைது செய்யப்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்தனர்.