சிங்கப்பூரின் வேலையிடங்கள் தொடர்ந்து பொருத்தமானவையாகவும் போட்டித்தன்மை மிக்கவையாகவும் விளங்குவதை உறுதிசெய்யப் புதிய இணையத்தளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
பணி மறுவடிவமைப்பு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வளங்கள் கொண்டதாக இந்த இணையத்தளம் அமைந்திருக்கும்.
செயல்முறைகளின் மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் ஒதுக்கீட்டுக்கும் வழிவகுக்க வேலை மறுவடிவமைப்பு, அதாவது வேலைக்கான பொறுப்புகள் மாற்றியமைக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் மனிதவள பட்டத்தொழிலர்கள் கழகமும் (ஐஎச்ஆர்பி) இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் திட்டம் குறித்து மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அறிவித்தார்.
“மிகுந்த போட்டித்தன்மைமிக்க இன்றைய சூழலில் வெற்றிபெற, வர்த்தகங்கள் சூழலுக்கு ஏற்ப வேகமாக மாறிக்கொள்ள வேண்டும். மாற்றங்களை எதிர்கொள்ள குழு ஒன்று தயாராக இருப்பதே போட்டித்தன்மைக்கான சாதகநிலையை ஒரு நிறுவனத்திற்குத் தரும்,” என்று மனிதவள பட்டத்தொழிலர்களுக்கான மாநாட்டில் டாக்டர் சான் கூறினார்.
தொழில்துறையுடன் இயைந்த நிபுணத்துவத்தையும் வளங்களையும் நிறுவனங்கள் இப்புதிய இணையவாசல்வழி பெறுவதன் மூலம் தங்களின் வர்த்தகத்தையும் ஊழியரணியையும் வேலை மறுவடிவமைப்பின் மூலம் மாற்றியமைக்கலாம்.
வர்த்தகச் சங்கங்கள், தொழில் சபைகள் ஆகியவற்றுடன் மனிதவள பட்டத்தொழிலர்கள் மூலமும் நிறுவனங்களை அணுகவுள்ளது, இத்திட்டத்தை நிர்வகிக்கும் ஐஎச்ஆர்பி.
இதுவரை 13 தொழில்துறைப் பிரிவுகளைப் பிரதிநிதிக்கும் 20க்கும் அதிகமான வர்த்தகச் சங்கங்களும் தொழில் சபைகளும் இத்திட்டத்திற்காக தங்களின் ஆதரவை உறுதியளித்துள்ளன.
நான்காவது ஆண்டாக புதன்கிழமையன்று நடைபெற்ற மாநாட்டு நிகழ்வில் 80 அமைப்புகளைப் பிரதிநிதித்து 600க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர்.