சிறப்புக் கல்விப் பள்ளி ஆசிரியர்கள் விரைவில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
இது சாத்தியமாக, சிறப்புக் கல்விப் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதியும் வழங்கப்படும்.
ரிபப்ளிக் பல்துறைத் தொழிற்கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்த சிறப்புக் கல்வி கற்றல் விழாவில் கல்வி இரண்டாம் அமைச்சர் முகம்மது மாலிக்கி ஓஸ்மான் இதனை அறிவித்தார்.
கூடுதல் விவரங்கள் அடுத்த ஆண்டு முற்பகுதியில் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டிலிருந்து சிறப்புக் கல்விப் பள்ளிகளின் முக்கியப் பணியாளர்களின் தொழில்முறை வளர்ச்சிக்குக் கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும் டாக்டர் மாலிக்கி கூறினார்.
சிறப்புக் கல்விப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளதால் தற்போதுள்ள 1,760 ஆசிரியர்களைக் காட்டிலும் 2030க்குள் கூடுதலாக 350 ஆசிரியர்கள் தேவைப்படுவர் என்றார் அவர்.
கல்வி அமைச்சின் இணையத்தளத்தின்படி, சிறப்புக் கல்விப் பள்ளி ஆசிரியர்களின் ஆரம்ப மாதச் சம்பளம் தற்போது $2,620 முதல் $3,120 வரை உள்ளது. கல்வி, அனுபவப் பின்னணி போன்ற அம்சங்களைப் பொறுத்து சம்பளம் வேறுபடுகிறது.
இரு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
‘கருத்துப் பரிமாற்றமும் மொழியும்’, ‘சமூக-உணர்வுபூர்வக் கற்றல்’ என இரு புதிய பாடத்திட்டங்களும் விழாவில் அறிமுகம் கண்டன.
‘சமூக-உணர்வுபூர்வக் கற்றல்’ பாடத்திட்டத்தை உருவாக்க உதவிய திருவாட்டி மதனரதி மதன் கோபால், 54, இத்திட்டம் மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்க ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் என்றார்.
‘ஏவா @ நபிரி’ பள்ளியின் வாழ்க்கைத் திறன்கள் பிரிவுக்கு இவர் தலைமைத் தாங்குகிறார்.
விருதளிப்பு
சிறப்புக் கல்விப் பள்ளிகளைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களும் மூன்று சிறப்புக் கல்விப் பள்ளிகளும் விழாவில் கல்வி அமைச்சு-எஸ்ஜி எனேபல் விருதுகளைப் பெற்றனர்.
ஐந்து சிறப்புக் கல்விப் பள்ளி ஆசிரியர்கள், சிறப்புக் கல்வியில் கல்வி அமைச்சின் முதுநிலை உபகாரச் சம்பளத்தைப் பெற்றனர்.
குறைந்தது ஐந்து ஆண்டு அனுபவம் கொண்ட பதிவுபெற்ற, பயிற்சிபெற்ற சிறப்புக் கல்விப் பள்ளி ஆசிரியர்களாக இருக்கும் சிங்கப்பூரர்கள் இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்.