அக்டோபர் மாதத்தில் மட்டும் பொட்டல விநியோகிப்பு மோசடியில் குறைந்தது 25 பேர் $38,000க்கு மேல் இழந்துள்ளதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது.
இந்த மோசடிச் சம்பவங்களில் ஒரு குறிப்பிட்ட போக்கு தெரிவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, பாதிக்கப்படுபவர்கள் தாங்கள் வாங்கியதாகக் கூறப்படும் பொருள்களுக்கு விநியோக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறும் குறுந்தகவல் மூலம் பாதிக்கப்படுபவர்களின் தனிப்பட்ட விவரங்கள் பெறப்படும்.
“எதிர்வரும் விழாக்காலம், அதன் பொருட்டு நிகழும் முக்கிய இணையத்தள விற்பனை நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கும் பொதுமக்கள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும்,” என்று ‘1.11 சேல்ஸ் பிளாக் ஃபிரைடே,’ ‘சைபர் மண்டே’ அல்லது ‘12.12 சேல்ஸ்’ போன்ற பிரபலமான விற்பனை நிகழ்வுகளை குறிப்பிட்டு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்படக்கூடியவர்கள், கூடுதல் கட்டணம் செலுத்தும்படி குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் கேட்டுக்கொள்ளப்படுவர். இந்தத் தகவல்கள் சிங்போஸ்ட் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் மூலமாக வருவது போல் வடிவில் இருக்கும்.
இந்த இணைப்புகளை சொடுக்கும் நபர்கள் வேறு இணையத்தளத்திற்கு இட்டுச் செல்லப்படுவர். அங்கு இவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படும்.
இதில் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் கணக்கிலிருந்தோ அல்லது கடன் அட்டைகளிலிருந்தோ அனுமதியின்றி பணப் பரிவர்த்தனை நிகழ்ந்த பின்னரே தாங்கள் மோசடிக்கு ஆளானது பற்றித் தெரியவரும்.
இதுபற்றி அறிவுறுத்தும் காவல்துறை, மோசடிக் குறியீடுகளை அடையாளம் காணும்படியும் தனிப்பட்ட விவரங்களையோ ஒருமுறை பயன்படுத்தப்படும் மறைச்சொற்களையோ யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கூறுகிறது.