உயர் ரத்த அழுத்தம் உள்ள ஒருவர், அதை வாழ்க்கைமுறை மாற்றங்களால் குறைக்க முடியாத நிலையில் மருந்து உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
அவ்வாறு கட்டுப்படுத்தாவிட்டால் ‘டிமென்ஷியா’ எனப்படும் முதுமைக்கால மறதிநோய் ஏற்படும் சாத்தியம் 42% அதிகரிக்கும் என்று ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது.
உயர் ரத்த அழுத்தத்தையும் டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தையும் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் வலுவாக உள்ளதாக கூ டெக் புவாட் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ரேச்சல் சியோங் குறிப்பிட்டார்.
அமெரிக்க மருத்துவக் கழக நாளேடு செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை, 17 ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தது. 60 வயதுக்கும் 110 வயதுக்கும் இடைப்பட்ட 34,519 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சிங்கப்பூர் உள்பட மொத்தம் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆய்வுகளில் பங்கேற்றனர். ஆய்வு தொடங்கிய காலத்தில் எவருக்கும் டிமென்ஷியா பாதிப்பு இல்லை.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்வதால் டிமென்ஷியா ஏற்படும் அபாயம், மருந்து உட்கொள்ளாதோருடன் ஒப்பிடுகையில் குறைவதாக ஆய்வு கண்டறிந்தது.
முதுமை அடையும்போது ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய’ உயர் ரத்த அழுத்த வரம்பு குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் அறிக்கைகள் மற்றும் காணொளிகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கை காக்க வேண்டும் என்று தனியார் துறை இதய மருத்துவ நிபுணர் டாக்டர் லிம் சூன் பின் குறிப்பிட்டார்.
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க, மிகக் குறைந்த ரத்த அழுத்தமும் அபாயம் அளிக்கலாம் என்று அவர் எச்சரித்தார். இதனால் முக்கிய உடல் உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும் என்றார் அவர்.