சிங்கப்பூரின் மக்கள்தொகை தொடர்ந்து வேகமாக மூப்படைகிறது. பிள்ளைகள் பிறப்பது குறைவாக இருக்கிறது. மக்களின் ஆயுள் கூடிவருகிறது. இவையே மக்கள்தொகை மூப்படைய காரணங்கள்.
அரசாங்கத்தின் மக்கள்தொகை பற்றிய வருடாந்திர சுருக்க அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அது இவ்வாறு தெரிவிக்கிறது.
சிங்கப்பூரில் 65 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள குடிமக்களின் விகிதாச்சாரம் முந்தைய 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வேகமாகக் கூடுகிறது.
கடந்த 2013ல் 11.7 விழுக்காடாக இருந்த அந்த விகிதம் 2023ல் 19.1 விழுக்காடாக கூடி இருக்கிறது.
சிங்கப்பூரில் வரும் 2030ஆவது ஆண்டுவாக்கில் குடிமக்கள் நால்வரில் ஒருவர் அல்லது 24.1 விழுக்காட்டினருக்கு வயது 65 ஆக அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.
தேசிய மக்கள்தொகை, மனித ஆற்றல் பிரிவு வெளியிட்டு உள்ள அந்த அறிக்கை, 1946ஆம் ஆண்டுக்கும் 1964ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்கள் 65க்குப் பிந்தைய வயதை எட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியது.
இவர்கள் இந்த ஆண்டில் 59 முதல் 77 வரை வயதுள்ளவர்களாக இருப்பார்கள் என்று அறிக்கை தெரிவித்து உள்ளது.