சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் குறுகிய காலத்திற்கு படிக்க வந்த வெளிநாட்டு மாணவர் ஒருவர், இரவு கேளிக்கை விடுதியில் வேலை செய்யும் பெண்ணை மானபங்கம் செய்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயது பட் முகமது அப்துல்லாவுக்கு திங்கட்கிழமை 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்தத் தவறினால் பட் நான்கு நாள்கள் சிறையில் அடைக்கப்படுவார்.
பிணையில் வெளிவருவதற்கு முன்னர் பட் நான்கு நாள்கள் சிறையில் இருந்தார்.
பட் டென்மார்க்கில் இருந்து சிங்கப்பூருக்கு 5 மாத படிப்பிற்காக மாணவர் விசாவில் வந்தார்.
செப்டம்பர் 2ஆம் தேதி பட் தனது நண்பர்களுடன் மரீனா பே சாண்ட்ஸில் உள்ள மார்க்கி சிங்கப்பூர் கேளிக்கை விடுதிக்குச் சென்றார்.
பின்னிரவு 2:50 மணி அளவில் பட் கேளிக்கை விடுதியை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
அப்போது கேளிக்கை விடுதியில் வேலை செய்யும் 30 வயது பெண்ணை மானபங்கம் செய்தார் பட்.
பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக காவல் அதிகாரிகளை அழைக்க பட் கைது செய்யப்பட்டார்.
பட் செய்த செயல் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருந்தன.
பட் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் மதுபோதையில் தவறு செய்துவிட்டதாக அவர் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
பட் டென்மார்க் நிரந்தரவாசி என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.