பகுதிநேர சமயப் போதகர் ஒருவருக்கு வயது 35. அவருக்கு எச்ஐவி கிருமித்தொற்றும் உண்டு.
சாங்கி கடற்கரை அருகே காவல்துறை அதிகாரிகள் வழக்கமாக சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தபோது அந்தக் குற்றவாளி சிக்கினார். அவருடைய கைப்பேசியில் சிறார் ஆபாசப் படங்கள் இருந்தன.
பாலியல் செய்கைக்குப் பணம் தருவதாக அவர் ஒரு சிறுவனுக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியையும் அதிகாரிகள் அவரின் கைப்பேசியில் பார்த்தனர்.
நான்கு பையன்களுடன் பல்வேறு பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதர 16 குற்றச்செயல்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
அந்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் எட்டு பிரம்படிகளும் கொடுக்க வேண்டும் என்று அரசினர் தரப்பு வாதிட்டது.
அதேவேளையில், தன் கட்சிக்காரருக்கு 16 முதல் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை போதும், பிரம்படி வேண்டாம் என்று அந்த நபரின் வழக்கறிஞர் வாதிட்டார்.
குற்றவாளிக்கு விதிக்கப்படக்கூடிய தண்டனை தொடர்பில் மேலும் விவாதம் நடக்கும் வகையில் தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.