சிலேத்தார் வெஸ்ட் லிங்க் விபத்தில் சிக்கிய 26 வயது பெண் பயணி இறந்துவிட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. விபத்துக்குள்ளான கார் ஒன்று இரண்டாகப் பிளந்தது.
ஆகஸ்ட் 11ஆம் தேதி அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இல்லை.
இந்த விபத்தில் சிக்கிய 26 வயது ஆண் பயணி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் தெரிவித்து இருந்தார்.
அந்த காரை ஓட்டிய 26 வயது ஆடவர், ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்ட நிலையில் கண்டறியப்பட்டார். குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சிறப்பு மீட்புக் கருவிகளைக் கொண்டு அந்த ஆடவரை விடுவித்தனர். கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்.
‘எஸ்ஜி ரோடு விஜிலாண்டே’ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில், விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி, காவல்துறை அமைத்திருந்த கூடாரத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. அப்பகுதியைச் சுற்றி ஆரஞ்சு நிறக் கூம்புகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த விபத்து தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்த காவல்துறை, விசாரணை தொடர்வதாகக் குறிப்பிட்டது.