மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று மோதியதில் அந்த மோட்டார் சைக்கிளில் ஓட்டுநருக்குப் பின்னால் பயணம் செய்துகொண்டிருந்தவருக்கு மூளையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிய 76 வயது யாப் எங் ஜீக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களை ஓட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக யாப்பிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த 29 வயது திரு டோனல்ட் இங் லூன் சியாங்கிற்கு மூளை தொடர்பான அறுவைசிகிச்சை பலமுறை நடத்தப்பட்டது.
அவரது அறிவாற்றல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பாதிப்பு நிரந்தரமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்தபோது சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்த 24 வயது திரு ஆல்ஃபிரட் இங் லூன் வேக்கு இடது கரத்திலும் மணிக்கட்டிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இவர் படுகாயம் அடைந்த திரு டோனல்ட் இங்கின் சகோதரர்.
இந்த விபத்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியன்று சுவா சூ காங் சாலையில் நிகழ்ந்தது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக யாப் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.