வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர[Ϟ]வாசிகளுக்கும் இடையிலான தொடர்பை விளையாட்டுகள் மூலம் மேம்படுத்த ரெட் டாட் ஸ்போர்ட்ஸ் ஃபியேஸ்டா விளையாட்டுகள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.
சிங்கப்பூரின் 58வது பிறந்தநாள், சிங்கப்பூர் இந்திய சங்கத்தின் 100வது பிறந்தநாளையும் கொண்டாட இவ்விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது.
சிங்கப்பூரரகள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இவ்விளையாட்டுகளில் கலந்துகொண்டனர்.
கிரிக்கெட், கபடி, ஃபுட்சால், ஹாக்கி, காற்பந்து போன்ற பலவிதமான விளையாட்டுகள் பேலஸ்டியர் சாலையில் உள்ள சிங்கப்பூர் இந்திய சங்கத்தின் திடலில் நடைபெற்றன.
இந்த ஆண்டு புதிதாக உள்ளூர் கபடிக் குழு போட்டியில் கலந்துகொண்டு இந்திய சங்கத்தின் விளையாட்டுகளில் கபடி விளையாட்டின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதை பகிர்ந்துகொண்டார் சங்கத்தின் தலைவர் திரு தமிழ்மாறன்.
“சிலம்பாட்டம், யோகா என்ற இந்திய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதோடு இந்திய சங்கத்தின் வசதிகளை மக்கள் தாராளமாக பயன்படுத்த இதுபோன்ற ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள் ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம் “ என்றார் திரு தமிழ்[Ϟ]மாறன்.
இதில் கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வரும் நிரந்தரவாசியான திரு விஜய[Ϟ]பாலன் பல ஆண்டுகளாக கபடிக் குழுக்களுக்கு பயிற்சி வழங்கி வந்துள்ளார்.
“இம்முறை உள்ளூர் கபடி குழுவையும் வெளிநாட்டு ஊழியர்களின் கபடிக் குழுக்களையும் ஒன்றிணைத்ததால் போட்டிகள் சூடுபிடித்துள்ளன. என் குழுவான நகை ஸ்போர்ட்ஸ் கிளப் போட்டியில் பங்கெடுப்பதில் பெருமை கொள்கிறோம்,” என்றார் திரு விஜயபாலன்.
இறுதியில் கபடிப் போட்டியில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் கைவசத்தைக் காட்டி வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது புதுகை பிரதர்ஸ் கபடி குழு.
இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு எரிக் சுவா கலந்துகொண்டார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்த இது போன்ற விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி பூண்டுள்ளார் இந்திய சங்கத்தின் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான தலைவர் திரு ஜோசஃப் பிரகாசம்.
“இந்திய பேரவையின் பிறந்த நாளும் சிங்கப்பூரின் பிறந்த நாளும் அடுத்தடுத்து வருவதால் ரெட் டாட் என்ற விளையாட்டுகள் சில ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டன. சென்ற ஆண்டிலிருந்து இப்போட்டிகளை ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்தோம்” என்றார் திரு ஜோசஃப்.
நமது வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையில் நல்ல உறவை ஏற்படுத்தி கம்பம் உணர்வை மறுபடியும் கொண்டுவர இப்போட்டிகள் உதவும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார் இவர்.
சுறுசுறுப்பான வாழ்க்கையைக் கடைபிடிக்க இவ்விளையாட்டுப் போட்டிகளும் இந்திய சங்கத்தின் நிகழ்ச்சிகளும் உதவி வருவதை வலியுறுத்தினார் 67 வயதான திரு ஜீவானந்தன். இதே வட்டாரத்தில் பிறந்ததிலிருந்து இருப்பதால் இந்தத் திடல்கள் அவருக்கு ஒன்றும் புதிதல்ல. இதனாலேயே நண்பர்களுடன் இப்போட்டிகளில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார் திரு ஜீவானந்தன்.
இத்துடன் புதிய தலைமுறைக்கு இந்த விளையாட்டுகளை கொண்டு செல்ல இந்திய பேரவை பல முயற்சிகளைத் தொடர்ந்து எடுப்பதை விளக்கினார் பேரவையின் உறுப்பினரான திரு அ கோவிந்தசாமி. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக காற்பந்து விளையாடி வரும் இவர் வருங்கால தலைமுறை விளையாட்டுகளில் ஈடுபட ரெட் டாட் விளையாட்டுகள் ஓர் அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறார்.