டிரான்ஸ்-கேப் டாக்சி நிறுவனத்தை வாங்க கிராப் நிறுவனம் முன்மொழிந்து இருப்பது குறித்து சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு டான், இதுகுறித்து கிராப் நிறுவனத்திடமிருந்து ஆணையத்துக்குத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
“இந்தக் கையகப்படுத்தலால் போட்டித்தன்மைக்கு ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட்டு சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கப்படும்,” என்று திரு டாக் கூறினார்.
இதுகுறித்து பொதுமக்களுடன் கலந்தாலோசனை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய டாக்சி நிறுவனமான டிரான்ஸ்-கேப்பை கிராப் 2023 நான்காம் காலாண்டிற்குள் கையகப்படுத்தப் போவதாக ஜூலை 20ஆம் தேதி செய்தி வெளியானது. இந்த உடன்பாடு அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
இந்தக் கையகப்படுத்தலில் டிரான்ஸ்-கேப்புக்குச் சொந்தமான ஏறத்த்ஆழ 2,200 டாக்சிகளும் 300க்கும் அதிகமான தனியார் வாடகை வாகனங்களும் அடங்கும். டிரான்ஸ்-கேப்பின் வாகன பட்டறையும் எரிபொருள் செயல்பாடுகளும் அதில் அடங்கும்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த திரு லியோங், போட்டித்தன்மைக்கு எதிரான நடைமுறைகள் குறித்து ஆணையம் மதிப்பிடுமா எனக் கேட்டிருந்தார்.
டிரான்ஸ்-கேப் கையகப்படுத்தப்பட்ட பிறகு மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர்களுக்குப் பாதகமான நிலைமை ஏற்படாமலிருக்க பாதுகாப்பு நடைமுறைகளை ஆணையம் செயல்படுத்துமா என்பது பற்றியும் திரு லியோங் கேட்டிருந்தார்.