போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனின் மாதச் சம்பளம், அடுத்த அறிவிப்பு வரும்வரை $8,500 ஆகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.
அவர் அமைச்சர்நிலை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டது முதல் அவருடைய சம்பளம் இந்த அளவுக்குக் குறைக்கப்பட்டது என்று பிரதமர் லீ சியன் லூங் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் புலன்விசாரணைப் பற்றிய அமைச்சுநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பிரதமர் உரையாற்றினார்.
அமைச்சர்கள் தொடர்பான இத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிது என்பதாலும் அதன் தொடர்பிலான விதிமுறைகள் இல்லை என்பதாலும் ஏற்கெனவே இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை என்பதாலும் இப்போதைய அரசாங்கச் சேவை நடைமுறையைத் தான் பயன்படுத்தி இருப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.
அரசாங்கச் சேவைப் பிரிவைப் பார்க்கும்போது, கடைசியாக அமைச்சர்களின் சம்பளம் 2012ல் சரிசெய்யப்பட்டது என்பது தெரியவருகிறது.
அமைச்சர் ஒருவரின் மாதாந்திர தொடக்கச் சம்பளம் $55,000. இதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் ஆண்டுக்கு அமைச்சர் ஒருவர் $1,100,000 சம்பளம் பெறுகிறார். 13வது மாதத் தொகை உட்பட அமைச்சரின் நிலையான சம்பளம் $715,000 ஆகும். எஞ்சிய தொகை மாறுபடும் அளவாகும்.
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவுக்கு அமைச்சர் ஈஸ்வரன் தொடர்பான தகவல்கள் கிடைத்தது என்றும் அதைப் பற்றி புலன்விசாரணை நடத்த வேண்டிய நிலை இருந்ததாகவும் அது பற்றி அந்தப் பிரிவு மே 29ஆம் தேதி தம்மிடம் தெரியப்படுத்தியதாகவும் மன்றத்தில் பிரதமர் குறிப்பிட்டார்.
‘‘அந்தப் பிரிவு தானே சொந்தமாக மேற்கொண்டு விசாரணைகளை நடத்தத் தொடங்கியது. யாரும் அந்தப் பிரிவிடம் புகார் எதையும் தெரிவிக்கவில்லை.
‘‘புலன்விசாரணை நடத்தப்பட வேண்டிய ஒரு விவகாரத்தை தானே கண்டறிந்து தன் பணியை அந்தப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டது,’’ என்று திரு லீ குறிப்பிட்டார்.
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்தவற்றை ஜூலை 5ஆம் தேதி அதன் இயக்குநர் தம்மிடம் எடுத்துக் கூறியதாகவும் திரு லீ தெரிவித்தார்.
‘‘மேல் விசாரணையைத் தொடரும் வகையில் அமைச்சர் ஈஸ்வரனை விசாரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் முறையான புலன்விசாரணையைத் தொடங்க அனுமதி வேண்டும் என்றும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
‘‘அதை ஏற்று ஜூலை 6ஆம் தேதி அந்த அனுமதியைத் நான் பிறப்பித்தேன்,’’ என்றும் திரு லீ தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் ஈஸ்வரனை அந்தப் பிரிவு ஜூலை 11ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
புலன்விசாரணை முடியும்வரை விடுப்பில் இருக்குமாறு அமைச்சர் ஈஸ்வரனுக்குத் தான் உத்தரவிட்டதாகவும் திரு லீ கூறினார்.
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் புலன்விசாரணை இன்னமும் நடந்து வருவதால், இந்த விவகாரம் பற்றிய மேல் தகவல்களை வெளியிட இயலாத நிலையில் தான் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதுவரை புலன்விசாரணை பாதிக்கப்படக்கூடிய வகையில் ஊகமான செய்திகள் எதையும் வெளியிடாமல் இருக்கும்படி மன்ற உறுப்பினர்களையும் பொதுமக்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
‘‘புலன்விசாரணை முழுமையாக, சுதந்திரமாக நடக்கும் வகையில் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தனது பணிகளைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும்.
‘‘புலன்விசாரணை முடிவடைந்ததும் அந்தப் பிரிவு தன்னுடைய அறிக்கையைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் தாக்கல் செய்யும்.
‘‘மேற்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி அந்த அலுவலகம் முடிவு செய்யும். இதுவே நம்முடைய வழியாக இருந்து வந்திருக்கிறது,’’ என்று திரு லீ குறிப்பிட்டார்.