சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திடுவதிலும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் சிங்கப்பூரின் சுய உதவிக் குழுக்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன என்று முன்னாள் மூத்த அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உதவுவதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் இக்குழுக்களின் முயற்சிகளும் பங்களிப்புகளும் சமூகத்தில் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் நேற்று நடைபெற்ற சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தொண்டூழியர் சிறப்பிப்பு நிகழ்ச்சியில் திரு தர்மன் கூறினார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாற்றி வரும் யாயாசான் மெண்டாக்கி, சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், சிண்டா, யுரேஷியர் சங்கம் ஆகிய சுய உதவி அமைப்புகள் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவு அளிப்பதிலும், தேசிய சமூக ஆதரவுத் திட்டங்கள் அவர்களை சென்றடைய உதவுவதிலும், தத்தம் சொந்த திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் உறுதுணையாய் இருக்கின்றன என்றும் ஹோம்டீம் என்எஸ்@ காத்திப் மன்ற உள்ளரங்கில் மாலை 4 மணிமுதல் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு தர்மன் தெரிவித்தார்.
சிண்டாவின் தலைவரான திரு தர்மன், “சிண்டா தற்போது 26,000க்கும் மேற்பட்ட பயனாளர்களைச் சென்றடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 21 விழுக்காடு அதிகம்,” என்றும் புகழாரம் சூட்டினார்.
“ஒவ்வொரு சுய உதவிக் குழுவும் தன்னுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் அதே சமயம் பிற சுய உதவிக் குழுக்களுடனும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். இந்த புரிந்துணர்வே பல இன பல சமயத்தைச் சார்ந்த நம் மக்களின் கல்வி, இளையர் மேம்பாடு உள்ளிட்ட பலவற்றை முன்னேற்ற துணை புரியும்,” என்றும் திரு தர்மன் கேட்டுக்கொண்டார்.
2022ஆம் ஆண்டில், சுய உதவிக்குழுக்களின் கல்வித் திட்டங்களில் பங்கேற்ற 52,000 மாணவர்களில் சுமார் 21,000 (43%) பேர் சுய உதவிக்குழுக்களின் கூட்டுக் கல்வித் திட்டங்களில் பங்கேற்றவர்கள் என்றும் இவர் குறிப்பிட்டார்.
சிண்டாவின் தொண்டூழியர்களின் பங்களிப்பைச் சிறப்பித்த இந்நிகழ்வில் 236 தொண்டூழியர்கள் கெளரவிக்கப்பட்டனர். இது குறித்து சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் கூறுகையில், “கடந்த ஓராண்டில் 500க்கும் மேற்பட்ட சிண்டாவின் தொண்டூழியர்கள் பலதரப்பட்ட சிண்டாவின் திட்டங்களில் 2,600 மணிநேரத்திற்கும் மேலாக பங்களித்துள்ளனர்,” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் விருது பெற்ற இந்து இளையர் கட்டமைப்பின் தலைவர் திரு கார்த்திக் ராமசாமி, “ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது தொண்டூழியத்திற்காக ஒதுக்குவதை வழக்கமாக்கி கொண்டேன். அன்றாட வாழ்க்கைமுறையில் அங்கமான தொண்டூழியம் என்னுடைய வாழ்வில் நான் ஆசிர்வதிக்கப்பட்ட பல விஷயங்களை தினமும் நினைவூட்டுகிறது. அதற்காக வழங்கப்பட்ட இந்த விருது தொடர்ந்து இந்த பாதையில் பயணிக்க ஊக்கமளிக்கிறது,” என்று கூறினார்.
இதேபோல் சிண்டாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டூழியராக சேவையாற்றியதற்காக கெளரவிக்கப்பட்ட திரு ரமேஷ் பட்மநாபன், 47, “சிண்டாவின் டோர் நோக்கிங் திட்டம் என் மனத்திற்கு நெருக்கமான ஒன்று. ஒவ்வொரு முறையும் உதவி தேவைப்படுவோருக்கு அவர்களுடைய வீட்டிற்கே சென்று ஆதரவு அளிப்பது அதிக மனநிறைவை அளிக்கும். பயனாளர்களின் முகத்தில் ஏற்படும் புன்னகை தொடர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபட வேண்டும் என்ற உந்துதலை அளிக்கிறது,” என்று கூறினார்.