நோய் வருவதைத் தவிர்ப்பதற்கான முறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கும் சுகாதாரத் திட்டம் சிங்கப்பூரின் கிழக்குப் பகுதி முழுவதற்கும் நீட்டிக்கப்படவுள்ளது.
ஹெல்த்தியர் எஸ்ஜி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் செயல்களுடன் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க சிங்ஹெல்த் குழுமம் எண்ணம் கொண்டுள்ளது. அதன்படி இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில் துணைப் பிரதமரும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெங் சுவீ கியட் ‘ஹெல்த் அப்!’ திட்டத்தை சனிக்கிழமை காலை பிடோக் டவுன் ஸ்குவேரில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் சாங்கி, சீமெய், சிக்லாப், பிடோக், சை சீ ஆகிய வட்டாரங்களில் வசிக்கும் 40 வயதைத் தாண்டியோருக்குத் தனிப்பட்ட சுகாதார ஆலோசனை வழங்கப்படும்.
நாள்பட்ட நோய், புற்றுநோய்ப் பரிசோதனைகள் உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளை அவ்வட்டாரவாசிகள் பெறுவர்.
ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு, சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து சிங்ஹெல்த், ‘ஹெல்த் அப்!’ திட்டத்தை உருவாக்கியதாக துணைப் பிரதமர் ஹெங் தெரிவித்தார். ‘ஹெல்த் அப்!’, ஹெல்த்தியர் எஸ்ஜி திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.
ஹெல்த்தியர் எஸ்ஜி, அவரவர் தங்களின் உடல்நலனைப் பேணிக்காக்கக் குடும்ப மருத்துவர்கள் உதவ வகைசெய்யும் தேசிய அளவிலான திட்டம்.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் சுமார் 1.5 மில்லியன் குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 770,000 பேர் 40 வயதைத் தாண்டியவர்கள்.
‘ஹெல்த் அப்!’ முதன்முதலில் 2021ஆம் அண்டு நவம்பர் மாதம் தெம்பனீசில் தொடங்கப்பட்டது. அப்போது 250 பேர் திட்டத்தில் சேர்ந்துகொண்டனர்.
அவர்களில் 60லிருந்து 80 விழுக்காட்டினர் நாள்பட்ட நோய், புற்றுநோய்ப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இது, தேசிய அளவில் அத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வோரின் விகிதத்தைவிட அதிகம்.
இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி குடியிருப்பாளர்களில் 10ல் நால்வர் 60 வயதைத் தாண்டியவர்கள் என்று திரு ஹெங் சுட்டினார். சிங்கப்பூர் ஒரு மூப்படையும் சமூகம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் 19 வயதுக்குக்கீழ் உள்ளவர்களைவிட கூடுதலாக மூத்த குடிமக்கள் இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
“அதனால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்கும் காலகட்டத்தை நீட்டிப்பதிலும் முதுமைக் காலத்தை அர்த்தமுள்ள, இன்பமான, மறக்கமுடியாத ஒன்றாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தவேண்டும்,” என்றார் திரு ஹெங்.