சிங்கப்பூரில் அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் 0.3 மாத அரையாண்டு போனஸ் கிடைக்கும். போனசுடன் இளநிலை ஊழியர்களுக்குக் கூடுதலாக $200 முதல் $400 வரை வழங்கப்படும்.
இந்த ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய அரையாண்டு போனஸ், சென்ற ஆண்டில் கிடைத்த 0.35 மாத அரையாண்டு போனசைவிட கொஞ்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கச் சேவைப் பிரிவு திங்கட்கிழமை அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது.
பொருளியல் வாய்ப்புகள் சரியில்லாமல் இருப்பதையும் உலகப் பொருளியலில் இறங்குமுக ஆபத்துகள் கணிசமாக இருப்பதையும் இந்த ஆண்டு இடையாண்டு போனஸ் கருத்தில் கொண்டு இருக்கிறது என்று அந்தப் பிரிவு தெரிவித்தது.
இளநிலை ஊழியர்களுக்கான ஒரு நேரத் தொகை சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வழங்கப்படும்.
இந்தத் தொகை 2021ல் $350 முதல் $700 வரைப்பட்டு இருந்தது.
அரசாங்கத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களுடன் அணுக்கமாகக் கலந்து ஆலோசித்து போனஸ் தொகை முடிவு செய்யப்பட்டதாக அந்தப் பிரிவு தெரிவித்தது.
MX13(I), MX14க்குச் சமமான தரநிலையில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்குக் கூடுதலாக $200 ஒரு நேரத் தொகை கிடைக்கும்.
MX15 மற்றும் MX16க்கு நிகரான தரநிலையில் இருப்போருக்கும் III முதல் V வரைப்பட்ட செயல் முறை ஆதரவுத் திட்ட தரநிலைகளைச் சேர்ந்தோருக்கும் $400 ஒரு நேரத் தொகை கிடைக்கும்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 0.4% வளர்ந்தது.
பொருளியல் அதற்கு முந்தைய காலாண்டில் 2.1% விரிவடைந்தது. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.5% முதல் 2.5% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரையாண்டு போனஸ் பற்றி கருத்துரைத்த தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) துணைத் தலைமைச் செயலாளர் திருவாட்டி சாம் ஹுய் ஃபோங், என்டியுசி பேச்சுவார்த்தை நடத்தி அரையாண்டு போனஸ் தொகையையும் இளநிலை அதிகாரிகளுக்கான ஒரு நேர கூடுதல் தொகையையும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
இது பற்றி கருத்து கூறிய அரசாங்க ஊழியர் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் தலைமைச் செயலாளர் சஞ்ஜீவ் குமார் திவாரி, அரசாங்க ஊழியர்களுக்கு 0.3 மாத அரையாண்டு போனசையும் இளநிலை அதிகாரிகளுக்கு கூடுதலாக ஒரு தொகையையும் வழங்க அரசாங்கம் இணங்கி இருப்பதை தனது சங்கம் வரவேற்று பாராட்டுவதாகக் கூறினார்.
கல்வித் துறையில் பணிபுரியும் அரசு ஊழியர் ஒருவர், அரசு ஊழியர்களுக்கு அரையாண்டு போனஸ் தொகை 0.3 மாதத்தொகைதான் என்ற செய்தி அறிந்து சற்று ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்.
சென்றாண்டு கூடுதல் தொகை கிடைத்ததாகக் தெரிவித்த இவர், இவ்வாண்டின் பொருளியல் சூழல் புரிந்தாலும், கொஞ்சம் அதிக தொகை கிடைத்தால் சிறப்பாக இருக்குமென தெரிவித்தார்.