கருணாநிதி துர்கா
தமிழில் சொல்வளத்தை மேம்படுத்தும் போட்டிகளை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை பல ஆண்டுகளாக தமிழ்மொழி மாதத்தின்போது இளையர்களுக்காக நடத்திவருகிறது. அவ்வாறு இவ்வாண்டு வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் ஆறாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுத்தம்’, விளையாட்டு நிகழ்ச்சி பாணியில் நடத்தப்பட்டது.
கடந்த ஈராண்டுகளாக இணையத்தின் வழி நடத்தப்பட்ட இப்போட்டி, இவ்வாண்டு கொவிட்-19 கட்டுப்பாடுகளின்றி சிறப்பாக நடந்தேறியது.
இம்மாதம் 8ஆம் தேதியன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற ‘யுத்தம்’ நிகழ்ச்சியில், வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு மனோகரன் சுப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அரையிறுதிச் சுற்றில் ‘பிளிங்க் பண்ணாம லிங்க் பண்ணு’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’, ‘சொல் சொல் சொல்லாமல் சொல்’ எனும் போட்டிகளும் இறுதிச்சுற்றில் ‘பிளிங்க் பண்ணாம லிங்க் பண்ணு’, ‘இங்கிலிஷ் பேசினாலும் தமிழன்டா’, ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ எனும் போட்டிகளும் நடத்தப்பட்டன.
புதுமையான போட்டி அங்கங்கள் பங்குபெற்றவர்களை மட்டும் அல்ல பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தன.
கொடுக்கப்பட்டுள்ள கருப்பொருளையொட்டி ஒரு வார்த்தையில் இருக்கும் மெய் எழுத்துகளை யூகித்து ஹேங்மேன் (Hangman) விளையாட்டு பாணியில் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” என்னும் போட்டி அங்கம் உற்சாகமூட்டும் வகை யில் அமைந்தது.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய நிலையில் பயிலும் மாணவர் களுக்கான பிரிவில் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
“நாங்கள் முதல்முறையாக யுத்தம் போட்டியில் பங்குபெற்று எதிர்பாராத விதமாக வெற்றிபெற்றுள்ளோம். நிச்சயமாக நாங்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் தமிழ்மொழி மாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோம்,” என்று முதல் பரிசு பெற்ற ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரி மாணவர்கள் கூறினர்.
“இந்த நிகழ்ச்சி ஒரு வெற்றியாக அமைய எங்கள் ஏற்பாட்டுக் குழுவின் ஆறுமாத கால உழைப்பு முக்கியப் பங்கு வகித்தது,” என யுத்தம் 2023ன் ஏற்பாட்டுக் குழு தலைவரான யுகேஷ் கண்ணன், 21, கூறினார்.
இளையர்களுக்காக இளையர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சொல்வளப் போட்டி, எழுத்துத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் மாணவர்களுக்குள் இருக்கும் திறனை வெளிப்படுத்த நல்லதொரு தளமாக அமைந்தது.
“போட்டியில் மாணவர்கள் ஆர்வமாகப் பங்குபெறுவதையும் அவர்கள் தமிழ் மொழி மீது கொண்டுள்ள நாட்டத்தையும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் துணைத் தலைவி, பாலமுருகன் தீபிகா, 21.
“குறிப்பாக, இளையர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இதுபோன்ற போட்டிகள் அவர்களிடத்தில் தமிழ்மொழி மீதான பற்றை அதிகரிக்கின்றன. அவர்களுக்குத் தமிழ்மொழியை சுவாரசியமான முறையில் கொண்டு செல்லும் இந்நிகழ்ச்சிகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்,” என்று திரு மனோகரன் சுப்பையா அறிவுறுத்தினார்.