பிப்ரவரி 2ஆம் தேதியன்று கூட்டுச்
சேர்க்கை நடவடிக்கை முடிவுகள்
கூட்டுச் சேர்க்கை நடவடிக்கைக்கான முடிவுகள் அடுத்த வியாழக்கிழமையன்று வெளியிடப்படும். அன்று ‘ஓ’ நிலைத் தேர்வை எழுதியுள்ள மாணவர்கள், காலை
9 மணி முதல் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது. முடிவுகளை குறுந்தகவல் வழியாக, அல்லது www.moe.gov.sg/jae என்ற இணையத்தளத்தின் வழியாக மாணவர்கள் காணலாம். இம்மாதம் 12ஆம் தேதியன்று 23,684 மாணவர்கள் தங்களின் ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர். அவர்களில் 99.8 விழுக்காட்டினர் ஒன்று அல்லது அதற்கு அதிகமான பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தொழிற்பேட்டைகளுக்கான
வாடகை, விற்பனை விலை அதிகரிப்பு
சிங்கப்பூரின் தொழிற்பேட்டைகளுக்கான வாடகையும் விற்பனை விலையும் 2022ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஒன்பதாவது மாதமாக அதிகரித்ததாக ஜூரோங் நகராண்மைக் கழகம் (ஜேடிசி) நேற்று வெளியிட்ட சந்தை அறிக்கை தெரிவித்துள்ளது. காலாண்டு அடிப்படையில் தொழிற்பேட்டைகளுக்கான வாடகை 2.1 விழுக்காடு அதிகரித்தது. ஆண்டு அடிப்படையில் வாடகை 6.9% அதிகரித்தது. விற்பனை விலை காலாண்டு அடிப்படையில் 1.7 விழுக்காடும் ஆண்டு அடிப்படையில் 7.5 விழுக்காடும் அதிகரித்திருந்தது. இந்நிலையில், வரும் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் சதுர மீட்டர் அளவிலான தொழிற்பேட்டைகள் தயாராகிவிடும் என்று எதிர்பார்ப்பதாக ஜேடிசி தெரிவித்துள்ளது.
ஃபேரர் ரோடு சரிவு குறித்து கட்டட, கட்டுமான ஆணையம் விளக்கம்
சுரங்கப்பாதைக்கான கட்டுமானப் பணிகளால் ஃபேரர் ரோட்டின் ஒரு பகுதி கடந்த நவம்பர் மாதம் சரிந்து விழுந்ததை அடுத்து, அச்சம்பவம் தொடர்பில் கட்டட, கட்டுமான ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சுரங்க வேலைக்கான துளை இடும் இயந்திரம் ஒன்று பழுதுபார்க்கப்படும்போது சுரங்கத்திற்கு முன்னால் இருந்த நிலம் சரிந்ததாகவும் இதனால் ஹாலந்து ரோட்டிலிருந்து ஃபேரர் ரோட்டுக்குச் செல்லும் சாலைப் பகுதியில் குழி ஒன்று ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட சாலைப் பகுதி, போக்குவரத்துக்கு ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்தது.