வங்கி வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மேலும் உயரும் என்று எதிர்பார்ப்பதாக வங்கித் துறை நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர். அதிக லாபம் தரும் சொத்துகளை நாடும் வாடிக்கையாளர் களைக் கவர வங்கிகள் மேலும் போட்டிபோட்டு வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கிடையே போட்டி அதிகரித்துவரும் வேளையில் அவை அண்மைய மாதங்களில் நிலையான வைப்புத் தொகை, முன்னிலை சேமிப்புக் கணக்குகள் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
ஆக அண்மையில் சிஐஎம்பி வங்கி, அதன் நிலையான வைப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை டிசம்பரில் உயர்த்தியது. சிங்கப்பூர் வெள்ளி நிலையான வைப்புத் தொகைக்கு, 12 மாதங்களுக்கு 4.2 விழுக்காடு வழங்கப்படும் என்று அது அறிவித்தது. குறைந்தது $10,000ஐ கணக்கில் வைக்க வேண்டும்.
இவ்வாண்டு இறுதிவரை மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அதிலும் இணையம் வழியாக மட்டும் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
யுஓபி வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு ஆக அதிக வட்டி விகிதத்தைத் தருகிறது. அதன் ஒன்அக்கவுன்ட் கணக்குகளில் $75,000 முதல் $100,000 வரை மிச்சக் கையிருப்பு வைத்திருந்தால் ஆண்டுக்கு 7.8 விழுக்காடு வட்டியை அது தருகிறது. அதற்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் சம்பளத்தை அந்தக் கணக்கில் செலுத்துவதுடன், அந்த வங்கியின் தகுதி பெறும் அட்டையைப் பயன்படுத்தி செலவுகளைச் செய்ய வேண்டும்.
நிலையான வைப்புத் தொகைக்கு வங்கிகள் கூடுதல் வட்டி வழங்கும். அதில் வைக்கும் தொகையைக் குறிப்பிட்ட காலத்துக்கு வெளியில் எடுக்க முடியாது.
சேமிப்பு கணக்குகளில் அதிகபட்ச வட்டி விகிதம் மேம்பட்டு இருப்பதுபோல தோன்றும். ஆனால் அவற்றுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் தகுதிகளை அடைய வேண்டும்.
குறுகியகால நோக்கில் சிங்கப்பூர் வெள்ளிக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் அதிகபட்ச அளவை நெருங்கியிருக்கலாம் என்று டிபிஎஸ் வங்கியின் மூத்த வட்டி விகித உத்திபூர்வ நிபுணர் யுஜீன் லியாவ் கூறினார்.