சிங்கப்பூரில் பதின்ம வயதினரிடையே புத்தகங்கள் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துள்ளதாகவும் வயது ஏற, ஏற அந்த ஆர்வம் குறைவதாகவும் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான பதின்ம வயது இளையர்கள் வயது ஏறும்போது அறவே புத்தகம் படிப்பது இல்லை.
வேறு பல வேலைகளைச் செய்வதிலேயே அவர்கள் நேரத்தைச் செலவிடுவதாக அண்மைய ஆய்வு கண்டறிந்துள்ளது.
தேசியக் கல்விக் கழகம், சென்ற ஆண்டு 5,700 உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறித்த ஆய்வை நடத்தியது.
இதில், உயர்நிலைப் பள்ளி மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களில் வெகு சிலரே புத்தகங்களை வாசிப்பது தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று பதிவு செய்துள்ளனர்.
உயர்நிலைப் பள்ளி முதல் அல்லது இரண்டாம் ஆண்டுக்குப் பிறகு மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் நீர்த்துப் போவதாக ஆய்வு கூறுகிறது.
புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டும் பதின்ம வயதினர், வாசிப்பது பிடித்துள்ளது என்பதாலும் பொழுதுபோக்கு, மொழி வளத்தை அதிகரிப்பது போன்ற மற்ற காரணங்களுக்காகவும் வாசிப்பதாகக் கூறினர்.
மின்னியல் சாதனங்களின்பால் ஈர்க்கப்படுதலும் பள்ளி நடவடிக்கைகள் அதிகரித்தலும் வாசிப்பு ஆர்வம் குறைவதற்கான காரணங்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.