புக்கிட் தீமா ரயில் தாழ்வாரத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் அங்கமாக புதிதாக உருவாக்கப்படும் அம்சங்கள் குறித்து நேற்று தகவல் வெளியானது.
ஹில்வியூவிற்கும் கிராஞ்சிக்கும் இடையிலான 6.3 கிலோமீட்டர் தொலைவிற்கு இயற்கைச் சூழலில் நடக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட நடைபாதை இந்த ஆண்டு இறுதிக்குள் திறந்துவிடப்படும். அடுத்த ஆண்டுக்குள் இதில் புதிய தற்காலிக ஓய்விடங்களும் கழிப்பறைகளும் கட்டப்படும்.
'அப்பர் புக்கிட் தீமா டிரஸ்' பாலத்திற்கு அருகே அமைந்திருக்கும் இந்தத் தளமேடைக்கு அருகே இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுக் கழிப்பறைகள் கட்டப்படும்.
பாதசாரிகளுக்கான மேம்பாலம் ஒன்று ஹில்வியூ ரோட்டிற்கு மேல் கட்டப்படும்.
அடுத்த ஆண்டு இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும்.
ஹில்வியூ ரோட்டுக்கும் செஸ்ட்நட் டிரைவுக்கும் இடைப்பட்ட ரயில் தாழ்வாரத்தின் எஞ்சிய பகுதி 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் சீரமைக்கப்படும்.
புதிதாக உருவாக்கப்படும் 'ரைஃபிள் ரேஞ்ச்' இயற்கைப் பூங்காவிற்கு இட்டுச்செல்லும் புதிய பாதை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும். 2024ல் பழைய ஜூரோங் ரயில்பாதையை ஒட்டி அமைக்கப்படவிருக்கும் புதிய இயற்கை நடைபாதையுடன் ரயில் தாழ்வாரத்தை இணைக்கும் பாதையும் அமைக்கப்படும்.
போன விஸ்தா முனை, குவீன்ஸ்வே முனை, தஞ்சோங் பகார் ரயில் நிலையம் உள்ளிட்ட முனைகளும் உரிய சமூகப் பயன்பாட்டு அம்சங்களுடன் ரயில் தாழ்வார மறுமேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.