2020ஆம் ஆண்டைவிட 20 மடங்கு அதிக பதிவுகள்; இப்போது 3,600 மின்சார கார்கள்
சிங்கப்பூரில் புதிய மின்சார வாக னப் பதிவு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடர்ந்து அதிகரித்தது. இப்போது புதிதாக பதியப்படும் அனைத்து கார்களிலும் இத்தகைய கார்களின் விகிதாச்சாரம் 8.1% ஆக இருக்கிறது.
இது சென்ற ஆண்டு முழுவதற்குமான அளவைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகம்.
மின்சார கார்களின் பதிவு 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு கூடி இருக்கிறது.
சிங்கப்பூரில் இப்போது ஏறத்தாழ 3,600 மின்சார கார்கள் ஓடுகின்றன. கிட்டத்தட்ட 2,500 மின்னேற்றிக் கூடங்கள் இருக்கின்றன என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று தெரிவித்தார். மின்கண்காணிப்பு பற்றிய சிங்கப்பூர் பசுமைத் திட்ட கலந்துரையாடலில் அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் 2021ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கரிமக் கழிவுகளைக் குறைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை சிங்கப்பூர் முடுக்கிவிட்டு இருக்கும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த சிங்கப்பூரைப் பலப்படுத்துவதற்கு உதவும் தீர்வுகளைக் காண்பது இந்தக் கலந்துரையாடலின் நோக்கம்.
அடுத்த 10 ஆண்டில் சிங்கப்பூர் தன்னுடைய எரிசக்தித் துறையை கரிமம் அல்லாத துறையாக மாற்று வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் கோர் கூறினார்.
போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை, எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாறிக் கொள்வது முக்கிய அணுகுமுறையாக இருக்கும் என்றாரவர்.
மின்சார கார் பதிவுகளைப் பார்க்கும்போது இந்த மாற்றத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதற்கான அறிகுறி தெரிகிறது என்று அவர் கூறினார்.
மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் இப்போதைய விதிமுறைகளைப் போக்குவரத்து அமைச்சும் நிலப் போக்குவரத்து ஆணையமும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் ஒவ்வொரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார்பேட்டை யிலும் 2025ஆம் ஆண்டு வாக்கில் பல மின்னேற்றிக் கூடங்கள் இருக்கும் என்று டாக்டர் கோர் குறிப்பிட்டார்.
மின்சாரத்தை ஏற்றிக்கொண்டதும் தங்கள் வாகனத்தை உடனடியாக அப்புறப்படுத்தும்படி பயனீட்டாளருக்கு ஊக்கமூட்டக்கூடிய தீர்வுகளை முன்வைக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மின்னேற்றிக் கூடங்களைப் பொறுப்புள்ள முறையில் பயன்படுத்திக்கொள்ளும்படி வாகன உரிமையாளர்களை அமைச்சர் வலியுறுத்தினார்.
அத்தகைய கூடங்களில் அளவுக்கு அதிக நேரம் வாகனங்களை நிறுத்திவைக்க வேண்டிய தேவையைத் தவிர்த்துக்கொள்ளும்வகையில் திட்டமிட்டு செயல்படு மாறும் அவர் உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.